பதிவு செய்த நாள்
14
நவ
2018
12:11
உத்திரமேரூர்:உத்திரமேரூர் அடுத்த நல்லூரில், 10ம் நுாற்றாண்டை சார்ந்த முற்கால சோழர்களால் வழிபட்ட பிரம்மசாஸ்தா என்னும் முருகன் சிலை, கண்டெடுக்கப் பட்டுள்ளது.
உத்திரமேரூர் அடுத்த நல்லூர் கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான வயலில், நீண்ட காலமாக ஒரு சிலை, நந்தி, சிவலிங்கம் இருந்தன. இது குறித்து அறிந்த, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தலைவர் பாலாஜி மற்றும் தமிழக தொல்லியல் துறை ஓய்வு பெற்ற பேராசிரியர், மார்க்சியகாந்தி ஆகியோர், அந்த சிலையை நேற்று 13ல், ஆய்வு செய்தனர். அப்போது, இந்த சிலை, 10ம் நூற்றாண்டை சார்ந்த பிரம்மசாஸ்தா என்னும் முருகன் சிலை என்பதை உறுதி செய்தனர். மேலும், அங்கிருந்த சிவலிங்கம், நந்தி ஆகிய சிலைகளும் அக்காலத்தை சார்ந்தது தான் என, தெரிவித்தனர்.முருகப்பெருமான் அவதாரங்களில், அக்க மாலை கமண்டலத்துடன் காட்சி அளிப்பதை, பிரம்மசாஸ்தா என, வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இது குறித்து, வரலாற்று ஆய்வு மைய தலைவர் பாலாஜி கூறியதாவது: இச்சிலை, 10ம் நூற்றாண்டை சார்ந்தது. இந்த வகையான முருகன் சிலை, பல்லவர் காலத் திலும், முற்கால சோழர் காலத்திலும் வழிபாட்டில் இருந்துள்ளது. குறிப்பாக, தொண்டை மண்டலம் எனும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டுமே அதிகமாக காணப் படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.