திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, முத்துக்குமார சுவாமி, தெய்வானை புறப்பாடாகினர். இக்கோயிலில் காலை சிறப்பு பூஜைகள் முடிந்து சிவாச்சார்யார்கள் பூஜை பொருட்களுடன் துணை கோயிலான பழனி ஆண்டவர் கோயிலுக்கு சென்றனர்.
மூலவர் பழனிஆண்டவருக்கு 100 லிட்டர் பால் உட்பட பல்வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. பின் சந்தன காப்பு சாத்துப்படியாகி ராஜ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவிழாக்களில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மட்டும் புறப்பாடாகி ரதவீதிகள், கிரிவீதியில் உலா வருவர். தைப்பூசத்தை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, முத்துக்குமார சுவாமி, தெய்வானை புறப்பாடாகினர். இரண்டு சுவாமிகள் புறப்பாடாவது ஆண்டுக்கு ஒரு முறை தைப்பூசத்தன்று நடக்கும். பக்தர்கள் பல்வேறு காவடிகள் எடுத்தும், உடலில் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.