அந்தக் காலத்தில் அரிசியைத் தெருவில் கூவி விற்பார்கள். மக்களும் தெருவில் வரும் வியாபாரியிடம் பேரம் பேசி வாங்குவர். ஒருநாள் வியாபாரி ஒருவர் தெருவில் அரிசி விற்றுச் சென்றார். அவரின் சத்தம் காஞ்சி மகாசுவாமிகள் முகாமிட்டிருந்த இடம் வரை தெளிவாகக் கேட்டது. பக்தர்களுக்குத் தீர்த்தம் வழங்கிக் கொண்டிருந்தார் சுவாமிகள். வரிசையில் மெல்ல நடந்து வந்தாள் மூதாட்டி ஒருவர். அவர் காது கேட்காததால், வலதுகையால் செவி மடலைக் குவித்தபடி மற்றவர் பேச்சைக் கேட்டார். இந்நிலையில் சுவாமிகளை வணங்கி,“பெரியவா...! எனக்கோ வயதாகி விட்டது. எந்த திருநாமத்தை ஜபித்தால் எனக்கு நற்கதி கிடைக்கும் என அறிவுறுத்தக் கூடாதா?” என்றார். சுவாமிகள் தீர்த்தம் வழங்கியபடி, “தெருவில் அரிசி வியாபாரி கூவிக் கூவிச் சொல்கிறாரே? அதன்படி நடந்து கொள்!” என்றார் சிரித்தவாறே. மூதாட்டிக்கு புரியவில்லை. அருகில் ன்றவர்களுக்கும் புரியவில்லை. “என்ன! சொல்றது புரியலையா?” எனக் கேட்டார் சுவாமிகள்.
“எப்போதும் ’ஹரி’ ’சிவ’ நாமத்தையும் ஜபித்தால் போதும். துக்கமெல்லாம் விலகும். மனதில் நிம்மதி பிறக்கும். அரிசி வியாபாரி என்ன சொல்லிக் கூவுகிறார் தெரியுமோ? ’அரிசி வாங்கலியோ... அரிசி’ என்று தானே கூவுகிறார்? யோசித்தால் புரியும். அரியும், சிவாவும் இருக்குமிடத்தில் எல்லா மங்கலங்களும் உண்டாகும். இத்திருநாமங்களை ஜபித்தால் பாவம் தொலையும். ’அரிசி வாங்கலியோ’ என்பதைக் கேட்கிற போது வயிற்று ஞாபகம் வந்தால் மட்டும் போதாது. ஆன்மாவின் ஞாபகமும் நமக்கு வர வேண்டும். வயிற்றுப் பசிக்கு அரிசியைச் சமைத்துச் சாப்பிடலாம். ஆன்மாவின் பசிக்கு அரி, சிவ நாமங்களை இடைவிடாது நாம் ஜபிக்க வேண்டும்!” சுவாமிகளின் சிலேடையான பேச்சைக் கேட்டு பக்தர்கள் மகிழ்ந்தனர்.