பதிவு செய்த நாள்
01
மார்
2012
11:03
திருவனந்தபுரம்: பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில் ஒன்றான, " சி அறையிலுள்ள, 45 தங்க குடங்களின் மதிப்பீடு பணி முடிந்தது. நேற்று முன்தினம் நடந்த மதிப்பீடு பணியில், நிபுணர் குழு உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. கேரளா, திருவனந்தபுரம், பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில், பல நூறு கோடி மதிப்புள்ள, பல நூற்றாண்டு பழமை வாய்ந்த தங்க, வைர, ரத்தின பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றை மதிப்பீடு செய்ய, சுப்ரீம் கோர்ட், வேலாயுதன் நாயரை ஒருங்கிணைப்பாளராக கொண்டு, நிபுணர் குழுவை நியமித்துள்ளது. இக்குழுவினர், கடந்த மாதம் 20ம் தேதி மதிப்பீடு பணியைத் துவக்கினர். முதலில், "எப் அறை, பின்னர் "இ அறையிலிருந்த பொக்கிஷங்கள் மதிப்பிடப்பட்டன. மேலும், "சி மற்றும் "டி அறைகளையும் திறந்து பரிசோதிக்க, சுப்ரீம் கோர்ட் அனுமதி பெறப்பட்டது. இதில், "சி அறை 27ம் தேதி திறக்கப்பட்டு, அதிலுள்ள தங்க பொருட்களை மதிப்பீடு செய்யும் பணி துவங்கியது. இரண்டு நாட்கள் நடந்த மதிப்பீடு பணியில், முதல் நாளில் 25ம், நேற்று முன்தினம் 20 என, அந்த அறையில் இருந்த 45 தங்க குடங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. நேற்று முன்தினம் காலை துவங்கிய மதிப்பீடு பணி, பிற்பகல் முடிந்தது. இப்பணியில், நிபுணர் குழு உறுப்பினர்களோ, கண்காணிப்பு குழுவினரோ பங்கேற்கவில்லை. இந்த அறையில் மேலும் பல தங்க, வைர, ரத்தின பொருட்கள் மதிப்பீடு செய்ய வேண்டும். மேலும், "எப் மற்றும் "இ அறையிலும் மதிப்பீடு செய்யாமல் உள்ள ரத்தின பொருட்களும் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். வைர, ரத்தின பொருட்களை மதிப்பீடு செய்வதற்கு, நிபுணர் குழுவில் வல்லுனர்கள் இல்லை. வல்லுனர்கள் வந்த பிறகே, அப்பணிகள் துவங்கும். தற்போதுள்ள நிலையில், மொத்தமுள்ள ஆறு அறைகளிலும் உள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்து முடிக்க, பல மாதங்களாகும் என்றே தெரிகிறது. மேலும், அதிநவீன பாதுகாப்புடன் கூடிய புதிய அறை அமைக்க, தேவையான இடத்தை ரிசர்வ் வங்கி அதிகாரிகளும், வல்லுனர்களும் பார்வையிட்டனர்.