ஒட்டன்சத்திரம்: மகாசிவராத்திரியை முன்னிட்டு, ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை வலையபட்டி மகாலட்சுமி அம்மன் கோயிலில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
வலையபட்டி கிராமத்தில், ராயர்குல வம்சம் குரும்பா இன மக்களுக்கு சொந்தமான மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். சிவராத்திரிக்கு அடுத்த நாள், வரம் கேட்பவர்களுக்கு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி வழக்கம் போல் இந்த ஆண்டும் நடந்தது. ஆண்கள், பெண்கள் உட்பட 20 க்கும் மேற்பட்ட பக்தர்களின் தலையில், பரம்பரை பூசாரி பூச்சப்பன் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றி வைத்தார். நேற்று காலை பரம்பரையாளர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டு சக்தி பெறப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பல மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கோயில் விழாவில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.