சந்தைக்குப் போய் பன்றிக்குட்டி வாங்கி வரச் சொன்னார் தந்தை. மகனும் வாங்கி வந்தான். வழியில் சிறுவர்கள் விளையாடு வதைக் கண்டான். பன்றி இருந்த பையை கீழே வைத்து விட்டு வேடிக்கை பார்த்தான். ஒரு குறும்பு பயல் அந்த பன்றியை எடுத்து விட்டு நாய்க்குட்டியை வைத்தான். சிறுவன் வீட்டுக்கு வந்து தந்தையிடம் பையைக் கொடுத்தான். பிறகென்ன...அவனுக்கு உதை விழுந்தது. திரும்பவும் போய் பன்றிக்குட்டி வாங்கி வர அனுப்பினார் தந்தை. போகும் வழியில் அதே விளையாட்டு. மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். குறும்பு பயல், இப்போது பன்றியை வைத்து விட்டு, நாயை வெளியே விட்டான். இதைக் கவனிக்காத சிறுவன் சந்தைக்குப் போய் வியாபாரியிடம் புகார் சொன்னான். பையைப் பார்த்த வியாபாரி உள்ளே பன்றிக்குட்டி இருப்பதைக் கண்டார். அவர் தன் பங்குக்கு உதை கொடுத்து அனுப்பினார்.
சிறுவன் வீட்டுக்கு வரும் வழியில் மீண்டும் விளையாட்டு; மீண்டும் வேடிக்கை. இம்முறையும் தன் வேலையைக் காட்டிவிட்டான் குறும்பு பயல். கவனிக்காததால் சிறுவனுக்கு மீண்டும் அடி. கொடுத்த வேலையைச் சரிவர செய்யாவிட்டால் இப்படித்தான் அலைக்கழிப்பு ஏற்படும். “தன் வேலையில் ஜாக்கிரதையாய் இருக்கிறவனை நீ கண்டால், அவன் ராஜாக்களின் முன் நிற்பான்,” என்கிறது பைபிள். நமக்கான பணியை பொறுப்புடன் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.