வில்லியனுார்: வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் பெருவிழா நேற்று நடந்தது. வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் பெருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரையில் அறுபத்து மூவருக்கு திருமஞ்சனம், திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு, தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.மாலை 7:30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் கோகிலாம்பிகை உடனமர்வு திருக்காமீஸ்வரர் ஊர்வலம் திருவாசக குழுவினரின் முற்றோதலுடன் வில்லியனுார் மாட வீதிகளில் நடைபெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் மற்றும் திருவாசக குழுவினர், சிவனடியார்கள் செய்திருந்தனர்.