சீதாதேவி விரதம்: மகாலட்சுமியை வழிபட மங்கள வாழ்வு அமையும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2026 07:03
இன்று தேய்பிறை தசமி நாளில் சீதாதேவி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட ஸ்ரீமகாவிஷ்ணு எடுத்த 10 அவதாரங்களில் ராமாவதாரமும் ஒன்று. இந்த அவதாரத்தில் ஸ்ரீராமனுக்கு உறுதுணையாக நின்று அவன் அவதாரப் பணி நிறைவேற விஷ்ணு பத்தினி மகாலட்சுமி எடுத்த அவதாரமே சீதாதேவி. அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் விஷ்ணு எடுத்த ராமாவதாரத்தில் அவருக்குச் சரிசமமாகத் தன் பணியைச் செய்து துன்பங்களை ஏற்று தியாகங்களை விரும்பிச் செய்து சூரியவம்சத்தின் புகழ் மறையாதிருக்க லவ குசர்கள் எனும் இரு வாரிசுகளையும் தந்த தெய்வீக வடிவம்தான் மகாலட்சுமியின் அம்சமான சீதை! இந்த அன்னை சீதாதேவியை பொறுமையின் வடிவமாக வணங்குகிறோம். பெண்கள் கணவரின் ஆரோக்கியத்திற்காக சீதா தேவியை வேண்டி இவ்விரதம் இருக்கின்றனர். ராமஜெயம் எழுதுவது, சுந்தர காண்டம் படிப்பது வாழ்வை வளமாக்கும். இன்று வீட்டில் ராமர், சீதா பட்டாபிஷேகம் தரிசிக்க சகல நன்மையும் கிடைக்கும்.