காஞ்சிப்பெரியவரைச் சந்திக்க வருமாறு சீடர் மூலம் எனக்கு அழைப்பு வந்தது. அறையில் அமர்ந்திருந்த சுவாமிகளை தரிசித்ததும், மின்சாரம் உடம்பில் பாய்வது போல உணர்ந்தேன். ஆதிசங்கரர் தனது குருநாதரை சந்தித்த குகை பற்றிய விஷயங்களை விவரித்தேன். சிறிது நேரம் கண்மூடி தியானித்த அவர், ”நீ பார்த்த குகைக்கு, நர்மதை நதிக்கரையில் இருந்து நீண்ட தூரம் இருப்பதாகச் சொல்கிறாய். உண்மையில் அந்த குகை நதிக்கரையை ஒட்டியே இருந்தது. நதிநீர் வருவதற்கான வசதியும் அதில் இருந்தது.
ஸ்வரூபானந்த சரஸ்வதி சுவாமி மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால், அவரிடம் ஆலோசித்தால் உனக்கு தெளிவு கிடைக்கும்” என்றார்.
திருப்பி விடப்பட்ட பந்து போல ஸ்வரூபானந்த சுவாமியை சந்தித்தேன். ஆராய்ச்சியை தொடர அவர் ஊக்கப்படுத்தினார். அப்பகுதியிலுள்ள குகைகளை ஒன்றுவிடாமல் பார்த்தேன். எங்கும் புலி, ஓநாய், மலைப்பாம்புகளே என்னை வரவேற்றன. ஒருகட்டத்தில் மனம் மிகவும் சோர்ந்தது. இதற்கிடையில் தற்செயலாக ஒருநாள் சங்கர நாராயண சாஸ்திரி எழுதிய ’சங்கரர் காலம்’ என்னும் ஆங்கிலப் புத்தகம் கிடைத்தது. குருநாதரான கோவிந்த பகவத்பாதரை, ஆதிசங்கரர் சந்தித்த குகை ஜோதிர்லிங்கத் தலமான ஓம்காரேஷ்வரர் கோயிலுக்கு அருகில் இருப்பதாக அதில் ஒரு குறிப்பு இருந்தது.
உற்சாகமுடன் ஓம்காரேஷ்வர் புறப்பட்டேன். அங்கு பல குகைகள் இருந்தாலும், குறிப்பிட்ட குகையில் மட்டும் நர்மதை நதிநீர் வருவதற்கு சுரங்கம் இருப்பதைக் கண்டு அதிசயித்தேன். ஓங்காரேஷ்வர் கோயில் கருவறைக்குச் செல்லும் சுரங்க பாதை ஒன்றும் அங்கிருந்தது. அங்கிருந்த பக்தர்கள் இந்த குகையை ’காளி மந்திர்’ என அழைத்தனர்.
ஓம்காரேஷ்வர் கோயிலை ஒட்டிய பகுதியில் மேற்கு நோக்கியதாக குகை இருந்தது. ஆதிசங்கரர் தீட்சை பெற்ற இடத்தில் மண்டபம் இருந்தது. இதை கட்டியவர் உஜ்ஜயினி மன்னர் ஹர்ஷ விக்ரமாதித்தன்.
துவாரகா பீடாதிபதி அபிநவ சச்சிதானந்த சுவாமி, ஸ்வரூபானந்த சுவாமி இருவரும் குகையை பார்வையிட்டு, எனது கருத்து சரியானது என தெரிவித்தனர். ஆனாலும் காஞ்சிப்பெரியவரின் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என வருந்தினேன்.
இந்த சமயத்தில் கர்நாடக மாநிலம் ஹம்பியில் காஞ்சிப்பெரியவர் முகாமிட்டிருப்பதாக கேள்விப்பட்டு சென்றேன். அங்கே எனக்கு குழப்பம் காத்திருந்தது.