பதிவு செய்த நாள்
13
மார்
2012
10:03
குற்றாலம் : குற்றாலம் கோயிலில் மூலிகை மருந்து காய்ச்சும் நிகழ்ச்சி துவங்கியது. குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள சுவாமி சிலைகள் அனைத்தும் மூலிகை மருந்துகளால் தயாரிக்கப்பட்டு ஆகம விதிகள் முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் 48 வகையான நறுமண மூலிகையால் பூஜை வழிபாடுகள் நடந்து வருகிறது. சந்தனம், நல்லெண்ணெய், பசும்பால் உடன் 48 வகையான மூலிகை பொருட்களால் தயாரிக்கப்படும் மூலிகை மருந்தை சுவாமிக்கு தினமும் 100 மிலி வீதம் அபிஷேகம் செய்து வருகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மூலிகை மருந்து தயாரிக்கும் நிகழ்ச்சி தொடங்கி 6 மாதத்திற்குள் முடிவடையும். தற்போது மூலிகை மருந்து காலியாகிவிட்டதால் நேற்று 48 வகையான மூலிகைகளுடன் நல்லெண்ணெய், பசும்பால் உடன் கூடிய மருந்து தயாரிக்கும் நிகழ்ச்சி துவங்கியது. ஏன் இந்த கோயிலுக்கு மட்டும் மூலிகை மருந்துகளால் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பதற்கு ஒரு தனிக்கதையே உண்டு.
சிவபெருமான் - பார்வதி திருமணம் இமயமலையில் நடந்தபோது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. தென்திசையை சமப்படுத்துவதற்கு பொதிகை மலையடிவாரப் பகுதியான குற்றாலத்திற்கு அகத்தியர் வந்தார். குற்றாலநாதராக அருள்பாலித்து வந்த விஷ்ணுவை கடந்து சென்றார். சிவனடியாரான அகத்தியரை கோயிலுக்குள் அனுமதிக்க விஷ்ணு பக்தர்கள் மறுத்துவிட்டனர். இதனால் கோபம் கொண்ட அகத்திய முனிவர் குற்றாலநாதராக காட்சியளித்த விஷ்ணுவின் தலை மீது கை வைத்து சிவனாக மாற்றிவிட்டார். அகஸ்தியர் கைபட்டு அழுத்தம் ஏற்பட்டதில் சிவனாக மாறிய குற்றாலநாதருக்கு தலையில் வலி ஏற்பட்டது. இவ்வலியை போக்க அகத்தியர் 48 வகை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மருந்தை குற்றாலநாதருக்கு அபிஷேகம் செய்துள்ளார். இதன் பின் வந்த முனிவர்கள் இப்பழக்கத்தை தொடரவே இப்பழக்கம் இன்று வரை தொடர்கிறது. சுத்தமான குளிர்ந்த நீரில் வெற்றிவேர் கலத்து தொதிக்க வைக்கப்படுகிறது. மூலிகைகள் கலக்கப்படுகிறது. இதன்பின் தொடர்ந்து அடுப்பு எரிந்து வரும் நிலையில் ஒருமாதம் கழித்து பால், இளநீர், சேர்க்கப்படுகிறது. 70 நாட்கள் கழித்து நல்லெண்ணெய் சேர்க்கப்படுகிறது. 90வது நாள் மூலிகை கலந்த தைலம் கிடைக்கிறது. இந்த மூலிகை தைலம் தான் தினமும் குற்றாலநாதருக்கு அபிகேத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த மூலிகை மருந்து தயாரிக்கும் பணி நேற்று துவங்கியது. நிகழ்ச்சியில் இணை ஆணையர் சுதர்ஸன், நிர்வாக அதிகாரிகள் சுகுமாறன் (குற்றாலம்), கணபதி முருகன் (தென்காசி), தங்கப்பாண்டியன் (இலஞ்சி), திருச்செந்தூர் கோயில் உள்துறை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், ஆய்வாளர் ஐயப்பன், கணக்கர் முருகேசன், கணேசபட்டர், பாஜ., நகர பொருளாளர் முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் வீரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும் மூலிகை மருந்தில் இருந்து 20 மிலி எடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது பல்வேறு நோய்களை நீக்கும் என்பது ஐதீகம்.