நாகர்கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் அம்மனின் திருவீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.ஒன்பதாம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 4:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 8:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் வலம் வந்த பகவதியம்மன் தேரில் எழுந்தருளினார். உச்சநீதிமன்ற நீதிபதி உதய் உமேஜ் லலித் தேர் வடம் பிடித்து இழுத்து துவங்கி வைத்தார். 12:00 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. இன்று இரவு 9:30 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. குளம் வறண்டு கிடப்பதால் படித்துறையில் அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு பூஜைகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.