பதிவு செய்த நாள்
20
மே
2019
03:05
மேட்டுப்பாளையம் : குழந்தைகளுக்கு நல்ல பழக்கத்தை சொல்லிக் கொடுப்பதுடன், பக்தியை ஊட்டி வளர்க்க வேண்டும், என, ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன்
பேசினார்.
மேட்டுப்பாளையத்தில் நாமசங்கீர்த்தன குழுவினரின் சார்பில் ராதா மாதவ திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற திருச்சி கல்யாணராமன், திரவுபதி மானம் காத்தல் என்ற தலைப்பில் பேசியதாவது:சூதாட்டத்துக்கு அழைப்பு வந்ததை, தனது தம்பி சகாதேவனிடம், அண்ணன் தர்மன் கேட்டார். அதற்கு சகாதேவன் சூதாட நம்மை விதி என்னும் ரதம் அழைத்துச் செல்ல வெளியே நிற்கிறது என்று கூறினார். சகாதேவன் மறைமுகமாக தடுத்தும், அதை
கேட்காமல் தர்மன் சூதாடச் சென்று நாடு, நகரம், சகோதரர்கள், மனைவி திரவுபதி ஆகியோரை இழந்தார்.அப்போது சபையிலிருந்த துரியோதனன், தம்பி துச்சாதனனிடம், திரவுபதியை இழுத்து வருமாறு கூறினான். துச்சாதனன் திரவுபதியை இழுத்து வந்து துகில் உரியும் போது சபையில் இருந்து கணவன்கள் ஐந்து பேரும் தலை குனிந்திருந்தனர்.
தனது மானத்தை காப்பாற்ற யாரும் வராத நிலையில், கடவுள் கிருஷ்ணனை வேண்டினார். அப்போது கிருஷ்ணன் சேலை தொடர்ச்சியாக வரச்செய்து திரவுபதியின் மானத்தை காப்பாற்றினார். எனவே, நமது குழந்தைகளுக்கு நல்ல பழக்கத்தை சொல்லிக் கொடுப்பதுடன், பக்தியையும் ஊட்டி வளர்க்க வேண்டும். அப்போது தான், அவர்களுக்கு கடவுள் மீது
பக்தி ஏற்படும். எதிர்காலத்தில் ஒழுக்கம் நிறைந்தவர்களாக வருவர். இவ்வாறு கல்யாண ராமன் பேசினார்.