பாலக்காட்டிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள திருத்தலம் ஏமூர். இங்குள்ள கைப்பத்திக் காவு (உள்ளங்கை கோயில்) கோயிலில் கை வடிவத்தில் காட்சி தருகிறாள், அன்னை ஹேமாம்பிகை. பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட இந்தத் தேவியின் கோயிலில், பெரியதும், சிறியதுமான இரண்டு கைகளுக்குத்தான் தினசரி அபிஷேகமும் ஆராதனையும் நடைபெறுகின்றன. அபயமளிக்கும் அற்புதக் கரங்களே மூலவராக இருப்பதால் இங்கு வேண்டிக்கொள்ளும் எல்லா பிரார்த்தனைகளும் நிச்சயம் பலிக்கும் என்கிறார்கள்.
குரூர் மனையைச் சேர்ந்த வயதான நம்பூதிரி ஒருவருக்கு, நீண்ட தூரம் சென்று அவரது குலதேவியை தரிசிக்க முடியாமல் போனதாம். அவரது வேண்டுதலுக்கு மனமிரங்கிய தேவி, ஒரு திருக்குளத்தின் மையத்தில் கரங்களை மட்டும் காட்டி அருள்புரிந்தாளாம். அந்த இடமே காலபோக்கில் கோயில்கள் ஆனதாம். உற்சவ விழாக்களில் எழுந்தருளும் பொருட்டு, சங்கு சக்கரம் ஏந்திய துர்கையாகவும் அருள்கிறாள் ஒரு தேவி. இன்னொரு சிறப்பம்சம்... இங்கு காலையில் சரஸ்வதி தேவியாகவும் உச்சிவேளையில் லட்சுமி தேவியாகவும் மாலையில் ஆதிபராசக்தியாகவும் அம்பிகை அருள்பாலிக்கிறாள்!