பதிவு செய்த நாள்
04
ஜூன்
2019
03:06
நந்தி என்ற சொல்லுக்கு ‘எப்போதும் ஆனந்தத்தில் இருப்பவர்’ என்றே பொருள். ஈசனைத் தாங்கிய ஆனந்தத்தில் திளைக்கும் நந்தியெம்பெருமான் ஆதிசித்தர் என்று போற்றப்படுகிறார். துருவாச முனிவரின் சீடரான சிலாத முனிவருக்கும் சித்திரவதி என்ற புண்ணியவதிக்கும் பிறந்தவர் நந்தியெம்பெருமான். இவரின் இயற்பெயர் ஜபேசர்.ருத்திரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்கவாத்யப் பிரியன், சிவவாகனன், கருணாகரமூர்த்தி, வீர மூர்த்தி, தனப்ரியன், கனகப்பிரியன், சிவப் பிரியன் ஆகியவை நந்தியெம்பெருமானின் சிறப்புப் பெயர்களாகும்.
எட்டாம் வயதில் ஜபேசருக்கு மரணம் வாய்க்கும் என்ற விதி இருந்த நிலையில் திருவையாற்றில் இருக்கும் சூரியத் தீர்த்த குளத்தில் நின்று பத்து ஆண்டுகள் கடும் தவமியற்றி சிரஞ்சீவி நிலையை எய்தார். அதுமட்டுமின்றி நந்தியெம்பெருமான் என்ற பட்டமும் ஞான உபதேசமும் பெற்றார். திருமழபாடியில் வியாக்கிர பாதரின் திருமகளான சுயம்பிரபையை மணந்து அருள்செய்தார். இன்றும் நடக்கும் இந்த நந்தி கல்யாணத்தை பார்த்தால் சீக்கிரமே திருமணம் உண்டாக்கும் என்பது ஆழ்ந்த நம்பிக்கை. சிவாயநம என்ற மந்திரத்தின் உருவத்தைக் கொண்ட இவர் ஊழிக்காலத்தில் சகலரையும் தாங்கும் பலம் மிக்கவர். வில்லாளிகளில் முதன்மையானவர். சகலரின் வேண்டுதல்களையும் கேட்டு ஈசனிடம் முறையிட்டு அருள் செய்பவர். சைவ சமயத்தின் தனி நாயகர் என்றே இவரைத் திருமூலர் கொண்டாடுகிறார். ஈசனின் முதல் சீடர் என்ற பெருமையைக் கொண்ட இவரது வழித்தோன்றல்கள் மூலமே சைவ ஆகமங்கள் ஓங்கி வளர்ந்தன. இவரின் அஷ்ட சீடர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் போன்றோரே குருபரம்பரை அல்லது திருக்கயிலாய பரம்பரை என்று போற்றப்படும் ஞானியர்களின் முன் தோன்றல்கள். தவறு செய்வோர்களை தண்டிக்கும் அதிகாரம் கொண்டதால் இவர் ‘அதிகார நந்தி’ என்ற சிறப்பையும் கொண்டவர். நந்தியை அண்டினோர் ஞானம் பெறுவார் என்ற சொல்லுக் கேற்ப நந்தியெம் பெருமானைத் தொழுது சிவஞானம் பெறுவோம்.