தெய்வப்பசுவான காமதேனு பூஜித்த சிவபெருமான், புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் இருக்கிறார். ஒருநாள் தேவலோகத்தில் இந்திர சபை கூடியது. தேவர்கள் அனைவரும் வந்து விட்ட நிலையில், காமதேனு மட்டும் தாமதமாக வந்தது. கோபம் அடைந்த இந்திரன், ” காமதேனுவே! தாமதமாக வந்த நீ பூலோகத்தில் காட்டுப்பசுவாக பிறக்கக் கடவது” எனச் சாபமிட்டார். காட்டுப்பசுவாக பிறந்த அது, சிவனை வழிபட்டது. காதுகளில் தீர்த்தம் எடுத்து வந்து தினமும் அபிஷேகம் செய்தது. ’காது’ என்ற சொல்லை ’கர்ணம்’ என்றும், பசு என்பதை ’கோ’ என்றும் சொல்வர். இதனால் இத்தலம் ’கோ கர்ணம்’ எனப்பட்டது.
பசுவை சோதிக்க விரும்பிய சிவன், காட்டுவழியில் புலி வடிவத்தில் தோன்றி தடுக்க முயன்றார். ” சிவனை தரிசிக்கச் செல்லும் என்னை தடுக்காதே! பூஜை முடித்து வந்ததும் உனக்கு இரையாகிறேன். சிவன் மீது சத்தியம்” என்றது. புலியும் சம்மதிக்க அங்கிருந்து பசு புறப்பட்டது. கொடுத்த வாக்கை நிறைவேற்றும் விதமாக சிறிது நேரத்திலேயே திரும்பி வந்தது. மனம் மகிழ்ந்த சிவன், தனது புலி வடிவத்தை மறைத்து, சிவலிங்கமாக காட்சியளித்தார். இவரே ’கோகர்ணேஸ்வரர்’ என இத்தலத்தில் குடிகொண்டிருக் கிறார். பின்னர் பிரகதாம்பாளுக்கும் சன்னதி எழுப்பப்பட்டது. மகேந்திரவர்ம பல்லவன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட குகைக்கோயில் இது. நுழைவு வாசல் தெற்கு நோக்கியும், சன்னதிகள் கிழக்கு நோக்கியும் உள்ளன. விநாயகர் சன்னதியை அடுத்துள்ள மண்டபத்தில் காமதேனுவின் சிவபூஜை, ராமாயண சம்பவங்கள் ஓவியமாக உள்ளன.