பதிவு செய்த நாள்
28
ஜூன்
2019
11:06
நரசிங்கபுரம்: நரசிங்கபுரம், லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, நேற்று கருடசேவை நடந்தது. பேரம்பாக்கம் அடுத்துள்ள, நரசிங்கபுரத்தில் உள்ளது மரகதவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில்.
இந்த கோவிலில், இந்த ஆண்டு, ஆனி பிரம்மோற்சவம், 25ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், தினமும், காலை, 10:00 மணிக்கு உற்சவர் திருமஞ்சனமும், மாலை 6:00 மணிக்கு பக்தி உலாத்தலும், ஆண்டாள் சன்னதி மண்டபத்தில் ஊஞ்சல் சேவையும் நடைபெறும்.விழாவின் மூன்றாம் நாள் திருவிழாவான கருடசேவை, நேற்று, காலை, 6:00 மணிக்கு நடந்தது. அதன்பின், இரவு, 7:00 மணிக்கு, அனுமந்த வாகனத்திலும் சுவாமி வீதியுலாவும் நடந்தது.நேற்று நடந்த கருடசேவையில், பேரம்பாக்கம், நரசிங்கபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, 7ம் நாள் திருவிழாவான தேரோட்டம், வரும், ஜூலை, 1ம் தேதி, காலை, 6:00 மணிக்கு நடைபெறும்.