திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மொட்டை போட்டு நேர்த்திக் கடன் செலுத்துவோரிடம் பணம் வசூல் செய்த 13 பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் கோவிலுக்கு வந்து மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். அவர்கள் கோவிலில் உள்ள மண்டபத்தில் ஹிந்து அறநிலை துறையினரிடம் 30 ரூபாய் கொடுத்து டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது ஒரு பிளேடு மற்றும் சந்தன வில்லை வழங்கப்படும்.பக்தர்கள் மண்டபத்தின் மேல்தளத்துக்கு சென்று அங்குள்ள பணியாளரிடம் டோக்கனை கொடுத்து மொட்டையடித்து நேர்த்திக் கடன் செலுத்துவர். கோவில் மண்டபத்தில் மொட்டையடிக்கும் பணியில் 160 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பக்தர்களிடம் கட்டாயப்படுத்தி 50 ரூபாய் வாங்குவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சமயபுரம் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறையினர் முடி காணிக்கை செலுத்தும் மண்டபத்தில் ஆய்வு செய்தனர். மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அதில் மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபட்டோர் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து 13 பேரை சஸ்பெண்ட் செய்து கோவில் இணை ஆணையர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.