பதிவு செய்த நாள்
20
மார்
2012
10:03
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க, எவ்வகை மண்ணை பயன்படுத்துவது என ஆய்வுக்காக, 9 இடங்களில் பல்வகை களிமண் சேகரிக்கப்பட்டுள்ளன. இருபது ஆண்டுகளுக்கு முன், இக்குளத்தில் சிமென்ட் பூசப்பட்டு, ஆழ்குழாய்கள் மூலம் தண்ணீர் விடப்பட்டு, தொட்டியாக மாற்றப்பட்டது. தரைக்கு அடியில் தண்ணீர் ஊற வாய்ப்பில்லாமல் போனதாலும், கோவிலைச் சுற்றி, பல 100 அடிகளுக்கு ஆழ்குழாய் அமைத்ததாலும், கோவில் தூண்களில் விரிசல் ஏற்பட்டன. கும்பாபிஷேகத்தின் போது அவை சரிசெய்யப்பட்டன. மேலும், தண்ணீர் தேங்கியிருப்பதால் பாசி படர்ந்து, குளத்தின் அழகையும் கெடுத்தது. இதன்காரணமாக, சிமென்ட் தளத்தை அகற்றி, 25 லட்சம் ரூபாய் செலவில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க, கடந்த, நவ., 21ல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. சென்னை ஐ.டி.டி., பேராசிரியர் ரவீந்திர கட்ஜு ஆலோசனையின் பேரில், கற்கள் அகற்றப்பட்டு, "ஜியோ மெம்பரிங் தொழில் நுட்பத்தில், அதாவது குளம் முழுவதும் உலோக விரிப்பை விரித்து, அதன்மேல், 2 அடிக்கு களிமண் நிரப்பி, நிரந்தர தண்ணீர் தேக்கப்படும். தாமரைகளும் வளர்க்கப்படும். இதற்காக எவ்வகை களிமண் தண்ணீரை உறிஞ்சாமல் இருக்கும், பொற்றாமரைக்குளத்தில் தோண்டப்பட்ட மணல், தண்ணீரை உறிஞ்சுமா என, ஐ.டி.டி., மற்றும் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆய்வு செய்து வருகிறது. கோவில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் கூறுகையில், ""களிமண் உறிஞ்சும் தன்மை குறித்து ஆய்வு செய்ய, செக்கானூரணி உட்பட 9 இடங்களில் குளங்களின் களிமண் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளன. அடுத்த வாரம் ஆய்வறிக்கை கொடுக்கப்படவுள்ளது. இதன் அடிப்படையில், எவ்வகை களிமண்ணை பயன்படுத்துவது என முடிவு செய்யப்படும், என்றார்.