பதிவு செய்த நாள்
21
மார்
2012
12:03
சிருங்கேரி சாரதா பீடத்தை அலங்கரித்த ஜகத்குருக்கள் அனைவரும் வேதசாஸ்திர விற்பன்னர்களாகவும், தெய்வீகசக்தி நிறைந்தவர்களாகவும் திகழ்ந்தனர். சாரதாபீடத்தின் 25வது குருவான முதலாம் சச்சிதானந்த பாரதீ சுவாமி கர்நாடகத்தை ஆண்ட நாயக்க மன்னர்களால் போற்றப்பட்டவர். இவர் காலத்தில் பைரவன் என்னும் மன்னன் சிருங்கேரி மடத்தின் செல்வத்தைக் கொள்ளை அடித்துச் செல்ல படைகளுடன் வந்தான். சச்சிதானந்த பாரதீ சுவாமி மடத்தின் காவல் தெய்வங்களான காலபைரவர், ஆஞ்சநேயர், கனகதுர்கா, காளிகாம்பாள் ஆகியோரை தியானித்தார். அந்த தெய்வங்களின் சந்நிதியில் இருந்து பேரொளி கிளம்பியது. அதைக் கண்ட மன்னன் திகைத்து ஓடினான். 30வது பீடாதிபதியான மூன்றாம் சச்சிதானந்த பாரதீ சுவாமிகள் ஹைதர்அலி, திப்புசுல்தான் ஆகிய இஸ்லாமிய மன்னர்களின் அன்பைப் பெற்றவராக விளங்கினார். இம்மன்னர்கள் அடிக்கடி சுவாமிகளுக்கு கடிதம் எழுதி தொடர்பு கொண்டிருந்தனர்.
திவான் பூர்ணய்யா என்பவர் சுவாமிகளை வாதத்திற்கு அழைத்தார். சுவாமிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இருவருக்கும் இடையில் ஒரு திரை தொங்க விடப்பட்டது. ஒருகட்டத்தில் திரையின் மறுபுறம் பெண்குரல் கேட்டது. ஆச்சரியத்துடன் திவான் திரையை விலக்க அந்த இடத்தில் சாரதாம்பாள் காட்சியளித்து மறைந்தாள். சுவாமிகளின் பெருமையை அறிந்த திவான் பூர்ணய்யா, நெடுஞ்சாண் கிடையாக விழுந்து மன்னிக்கும்படிவேண்டினார். 32வது பீடாதிபதியான விருத்த நரசிம்மபாரதீ சுவாமி கருணைக்கடலாக விளங்கினார். இவர் சிறுவயதில் சாஸ்திரம் படிப்பதற்காக காசிக்கு நடந்தே சென்றார். தவ வலிமையால் பசியையும், தாகத்தையும் கட்டுப்படுத்திய பெருமை இவருக்குண்டு. ஐம்பது வயதுக்குப்பிறகு உணவை அறவே ஒழித்து, பாகற்காய் மட்டும் சாப்பிட்டார். ஜகத்குருவின் ஆழ்ந்த பக்தியைக் கேள்விப்பட்ட ஆங்கிலேய கமிஷனர் போரிங், ஒருசமயம், இரவு ஒருமணிக்கு மடத்துக்கு வந்தார். அப்போதும் அவர் பக்தியோடு சந்திரமவுலீஸ்வரருக்குப் பூஜை செய்து கொண்டிருந்தது கண்டு ஆச்சரியம் கொண்டார். நாளை (மார்ச்22) சிருங்கேரி சுவாமி, கோவை ரேஸ்கோர்ஸ் ரோடு, சிருங்கேரி சங்கர மடத்தில் பக்தர்களுக்குத் தரிசனம் அளிக்கிறார். போன்: 0422 222 0760.