காரைக்கால்: காரைக்கால் மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான காரைக்கால் அம்மையார். பரமதத்தர் திருக்கல்யாணம் மிக விமர்சையாக நடந்தது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார் இவரது இயற்பெயர் புனிதவதியார் 63 நாயன்மார்களின் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக்கோவில் உள்ளது. காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா நடக்கிறது. இந்த ஆண்டு கடந்த 13ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து மாலை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. இன்று காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் மணமகன் பரமதத்தர் பட்டாடை. நவமணி மகுடம். ஆபரணங்கள் அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார். பின் புனிதவதியார் பட்டு புடவை உடுத்தி மணக் கோலத்தில் எழுந்தருளினார்.பாரம்பரியப்படி திருமண மேடையில் மாப்பிள்ளை வீட்டாருக்கு மணமகள் வீட்டார் கவுரவிக்கப்பட்டு தாம்பூலம் மாற்றிக் கொண்டனர். பின் யாகம் வளர்க்கப்பட்டு திருமண விழாவிற்கான சடங்குகள் நடந்தது. காலை 10 மணிக்கு ஆலய குருக்கள் புனிதவதியாருக்கு மாங்கல்யம் அணிவித்தார். பின் மகாதீபாராதனை நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தில் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மாங்கல்யம், மஞ்சள், குங்குமம், மாங்கனிகள் கூடிய தாம்பூல பை வழங்கப்பட்டது.