பதிவு செய்த நாள்
20
ஜூலை
2019
12:07
திண்டுக்கல்: திண்டுக்கல் கோயில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், அபிராமியம்மன், பத்ரகாளியம்மன் கோயில்களில் முதல் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து கூழை வாங்கி பருகினர்.
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 10 வரை தினசரி மாலையில் நுாறாயிரம் மலர்கள் துாவி லட்சார்ச்சனை நடக்கிறது. ஆகஸ்ட் 11ல் ஆடி லட்சார்ச்சனை வேள்வி நடைபெறவுள்ளது. நேற்று முதல் ஆடிவெள்ளியை முன்னிட்டு, பெரியநாயகியம்மனுக்கு அபிஷேகம் செய்து, முத்தங்கி அலங்காரத்தில் லட்சார்ச்சனை நடந்தது. திருஆவினன்குடி கோயில் துர்கையம்மன், தெற்குகிரிவீதி காளிகாம்பாள் கோயில், வனதுர்க்கை, மகிஷாசூரமர்த்தனி, லட்சுமிபுரம் மகாலட்சுமி, நேதாஜிநகர் காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில், அ.கலையம்புத்துார் கல்யாணி சமேத, கைலாசநாதர் கோயிலில் லட்சார்ச்னை, ஆடிவெள்ளி வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு ‘கூழ்’ பிரசாதம் வழங்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கு மலர் அலங்காரம், அபிேஷகங்களுடன் சிறப்பு பூஜை நடந்தது. பெண்கள் அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர். தங்கச்சியம்மாபட்டி கரைமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. 108 சிவசக்தி ஆராதனைக்குழு மற்றும் காமாட்சியம்மன் ஆராதனைக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோயிலில் அபிேஷகத்துடன், சிறப்பு பூஜைகள் நடந்தது.
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கம்பு, சோளம், கேழ்வரகு, நெல், தினை உள்ளிட்ட நவதானியங்களால் தயாரிக்கப்பட்ட அன்னக் கூழ் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வெள்ளிக்காப்பு கவச அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சின்னாளபட்டி: சின்னாளபட்டி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் பக்தர்கள் வழங்கிய கம்பு, கேழ்வரகு, அரிசி ஆகியவற்றை கலந்து கூழ் தயாரிக்கப்பட்டது. நேற்று காலை நவசக்திக்காக உருவாக்கப்பட்ட கலயங்களில் கூழ் நிரப்பப்பட்டது. இக்கலையங்களுடன் பக்தர்களின் ஊர்வலம் நடந்தது. நாகர் சன்னதி வழிபாட்டை தொடர்ந்து, கருவரைக்கு கலயங்கள் அழைப்பு நடந்தது. சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், திருமஞ்சன அபிேஷகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன், வாலை, திரிபுரை சக்தி அம்மனுக்கு ஆடி வெள்ளி சிறப்பு ஆராதனைகள் நடந்தது.