பதிவு செய்த நாள்
28
மார்
2012
11:03
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திரத் திருக்கல்யாணப் பெருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம், பிரம்மோற்சவம் நடைபெறும். வழக்கம்போல் இந்தாண்டு உற்சவம், நேற்று காலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 7 மணிக்கு பவழக்கால் சப்பரம், இரவு சுவாமி சிம்ம வாகனத்திலும், அம்பிகை கிளி வாகனத்திலும், வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் நாளான இன்று காலை, சூரியப்பிரபை, இரவு சந்திரப்பிரபை, 29ம் தேதி காலை பூத வாகனம், இரவு சுவாமி, அம்பிகை, சண்டேசுவரர், ஆகியோர் பழவக்கால் சப்பரங்களிலும், விநாயகர் வெள்ளி பெருச்சாளி வாகனத்திலும், சுப்ரமணியர் தங்க மயில் வாகனத்திலும், சின்னகாஞ்சிபுரத்திற்கு எழுந்தருள் நிகழ்ச்சி நடைபெறும். நான்காம் நாள் திருவிழாவாக, 30ம் தேதி காலை நாக வாகனம், இரவு வெள்ளி இடப வாகனம், 31ம் தேதி காலை வெள்ளி அதிகார நந்தி சேவை, இரவு கைலாசபீட ராவண வாகனம், 1ம் தேதி காலை பிரபல உற்சவமான 63 நாயன்மார்கள் வீதியுலா, இரவு வெள்ளித்தேர் உற்சவம் நடைபெறும். ஏழாம் நாள் திருவிழாவான, 2ம் தேதி காலை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். இரவு மகா அபிஷேகம் நடைபெறும். அடுத்து 3ம் தேதி காலை ஆறுமுகப்பெருமான் எடுப்பு ரதக்காட்சி, மாலை 5 மணிக்கு பிட்சாடனர் தரிசனம், இரவு குதிரை வாகனம், 4ம் தேதி காலை ஆள்மேல் பல்லக்கு, இரவு தல மகிமையை விளக்கும், வெள்ளி மாவடி சேவை, 5ம் தேதி காலை சபாநாதர் தரிசனம், இரவு பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம், வெகு சிறப்பாக நடைபெறும். மறுநாள் காலை 5 மணிக்கு தங்க இடப வாகனத்தில், சுவாமி வீதியுலா நடைபெறும். பதினோராம் நாள் திருவிழாவாக, 6ம் தேதி பகல் 12 மணிக்கு, கந்தப்பொடி உற்சவம், இரவு நூதன வெள்ளி உருத்திரகோடி விமானம், 7ம் தேதி காலை புருஷாமிருக வாகனம், இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா, 8ம் தேதி காலை சர்வதீர்த்தகுளத்தில் தீர்த்தவாரி, இரவு யானை வாகனம் மற்றும் கொடி இறக்கம் நடைபெறும். விழா நிறைவாக 9ம் தேதி காலை 108 கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகம், மாலை 6 மணிக்கு, பொன் விமானத்தில் திருமுறை உற்சவம் நடைபெறும். விழாவையொட்டி, தினமும் காலை, இரவு கோவில் வளாகத்தில், சைவ சமய சொற்பொழிவுகள், தேவாரம் பாராயணம், இன்னிசை கச்சேரி நடைபெறும்.