ராமேஸ்வரம்:ஆடித்திருக்கல்யாண விழாவையொட்டி ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் தங்க கேடயத்தில் உலாசென்றதால் கோயில் நடை அடைக்கப்பட்டது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று 17ம் நாள் ஆடித் திருக்கல்யாணம் விழாவை யொட்டை காலை 6:30 மணிக்கு சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க கேடயத்தில் புறப்பாடாகி ரதவீதி, திட்டகுடி வழியாக வீதி உலா சென்று கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருளினர். அப்போது வீதியெங்கும் கூடியிருந்த பக்தர்கள் சுவாமி, அம்மனை தரிசித்தனர். இதன் பின் கோயில் நடை அடைக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. பர்வதத்தில் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை முடிந்ததும், அங்கிருந்து புறப்பாடாகி இரவு 10:00 மணிக்கு திருக்கோயிலுக்கு சுவாமி, அம்மன் திரும்பியதும், கோயில் நடை திறக்கப்பட்டு அர்த்தசாம பூஜை முடிந்ததும் மீண்டும் கோயில் நடை அடைக்கப்பட்டது.