பதிவு செய்த நாள்
23
ஆக
2019
02:08
வடமதுரை : வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலய திருவிழாவிற்காக பழநியை சேர்ந்த 50 பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர்.இத்திருவிழா வரும் ஆக.29ல் கொடியேற் றத்துடன் துவங்கி செப்.8 வரை நடக்க உள்ளது.
இதில் பங்கேற்க திண்டுக்கல், தேனி மாவட்ட பக்தர்கள் சிறு குழுக்களாக வடமதுரை வழியே பாதயாத்திரையாக சென்ற வண்ணம் உள்ளனர்.இவர்களுள் பலர் கொடி, சிலுவையை ஏந்தியும், சப்பரம், தேர், சைக்கிள் ரிக் ஷா போன்றவற்றில் மாதா சிலையுடன் பாடல்களை ஒலிபரப்பியவாறு செல்கின்றனர்.
பழநி தெசராம்மாள் கோயில் தெருவை சேர்ந்த பக்தர்கள் 50 பேர் ஒரே குழுவாக கடந்த ஆக.19ல் பழநியில் பாதயாத்திரை துவங்கி ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் வழியே வடமதுரை வந்தனர்.இக்குழுவினர் கூறுகையில், ’மணப்பாறை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் வழியே ஆக.28 இரவு வேளாங்கண்ணி சென்றடையும் வகையில் திட்டமிட்டுள்ளோம். மறுநாள் (ஆக.29) காலையில் கொடியேற்று விழாவில் பங்கேற்று பின்னர் ஊர் திரும்புவோம்’ என்றனர்.