பதிவு செய்த நாள்
26
ஆக
2019
12:08
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே காசவளநாடு வேங்கராயன்குடிக்காட்டில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவில்லாயி அம்மன் உள்ளிட்ட ஐந்து கோயில்களில் நேற்று மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. காசவளநாட்டின் ஆன்மிகத் தலமாக விளங்கும் வேங்கராயன்குடிக்காட்டில் காவல் தெய்வமான வில்லாயி அம்மன், விநாயகர், மலையாளத்தம்மன், பைரவர், அங்காளபரமேஸ்வரி ஆகிய கோயில்களில் கடந்த 2002-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி திருப்பணிகள் செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து 17 ஆண்டுகள் கழித்து ஸ்ரீவில்லாயி அம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் புதிதாக எழுப்பப்பட்டும், ஊரின் நுழைவுவாயிலில் புதிதாக அலங்கார தோரணவாயில் அமைக்கப்பட்டும், ஐந்து கோயில்களுக்கும் ஆன்மிக அன்பர்களின் நன்கொடையால் மிகுந்த பொருட்செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டது. இந்த ஐந்து கோயில்களின் திருப்பணிகள் நிறைவுற்று மகாகும்பாபிஷேக விழா கடந்த 23-ம் தேதி தொடங்கியது. ஊரின் புனித தீர்த்தமான காசாம்பள்ளம் திருக்குளத்திலிருந்து யானை மீது புனித நீரும், இவ்வூரில் பிறந்த மற்றும் புகுந்த பெண்களால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலமும், பாரம்பரிய கலையான சிறுவர் - சிறுமியர் பங்கேற்ற கோலாட்டம், கும்மியாட்டம், தப்பாட்டம், சிவவாத்திய இசைகருவிகள், நாத சங்கமம், வானவேடிக்கையுடன் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்த பின்னர் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, நேற்று காலை 9 மணிக்கு யாகசாலையிலிருந்து புனித நீர் கடங்கள் புறப்பாடும், அதனைத் தொடர்ந்து ஐந்து கோயில்களின் விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகாதீபாரதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவில் மானாமதுரை கணபதி சுப்ரமணியம் சாஸ்திரிகள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வில்லாயி அம்மன் கோயில் முழுவதும் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டது. இதனை ஸ்தபதிகள் சோலையன், சண்முகம் ஆகியோர் செய்தனர். மூன்று நாட்களும் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் 20-க்கும் மேற்பட்ட வேத விற்ப்பனர்கள் பங்கேற்று யாகசாலை பூஜைகள், பூர்ணஹூதி, தீபாரதனை ஆகியவற்றை நடத்தினர். மேலும், விழா நாட்களில் வேதபாராயணம், தேவார இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்திருந்தனர்.