திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் எப்போது நடக்கும் என பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இக்கோயில் எதிரில் சுப்ரமணியர் சன்னதி, இடையில் கங்கைக்கு நிகரான என்றும் வற்றாத புனித தீர்த்தம் அடங்கிய சுனை உள்ளன. சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் கரத்திலுள்ள தங்கவேல் செப்., மலை மீது கொண்டு செல்லப்பட்டு சுனை தீர்த்தத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். இக்கோயில் கட்டப்பட்டது முதல் விமானம் அமைக்கப்படவில்லை. 2005ல் விமானம் அமைத்து கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகளாகி விட்டன. கும்பாபிஷேக திருப்பணிகளை துவக்குவதற்கான அறிகுறிகள் இல்லை. 19 மாதங்களாக கோயிலுக்கு தனி துணை கமிஷனர் நியமிக்கப்படவில்லை. பொறுப்பு அதிகாரிகளே நியமிக்கப்படுவதால் அவர்கள் கும்பாபிஷேகப் பணிகள் துவக்குவதில் ஆர்வம் காட்ட தயங்குகின்றனர். கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.