பதிவு செய்த நாள்
07
ஏப்
2012
10:04
சபரிமலை:பங்குனி உத்திர உற்சவம் முடிந்து, சபரிமலை நடை அடைக்கப்பட்டது. சித்திரை விஷூ உற்சவத்திற்காக கோவில் நடை, வரும் 10ம் தேதி மாலை மீண்டும் திறக்கப்படும்.கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை அய்யப்பன் கோவிலில், பங்குனி உத்திர உற்சவம் நடந்து வந்தது. உற்சவத்தின்போது, ஸ்ரீபூத பலி, பள்ளி வேட்டை, ஆராட்டு (தீர்த்தவாரி) ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆராட்டு நிகழ்ச்சிக்காக, நேற்று முன்தினம் உற்சவ மூர்த்தி யானை மீது வைக்கப்பட்டு பம்பைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு எண்ணெய், நெய், தேன், இளநீர், பன்னீர், மஞ்சள்பொடி ஆகியவற்றால், அபிஷேகம் செய்விக்கப்பட்டு, பம்பை நதியில் உற்சவமூர்த்தியை நீராட்டினர். பின்னர் மாலை 4 மணியளவில் சபரிமலை வந்தடைந்த உற்சவர் முன்னிலையில், அங்கு கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பங்குனி உத்திர உற்சவ நிகழ்ச்சிகள், சிறப்பு பூஜைகள் நிறைவடைந்தன.இரவு 10 மணிக்கு மூலவருக்கு, விபூதி அபிஷேகம் செய்விக்கப்பட்டு ஜபமாலை அணிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஹரிவராசனம் பாடல் பாடி, கோவில் நடை அடைக்கப்பட்டது. இனி, சித்திரை மாத பூஜைகள் மற்றும் விஷூ உற்சவத்திற்காக, வரும், 10ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்படும்.