பதிவு செய்த நாள்
01
அக்
2019
05:10
விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர் உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள் நமக்கு நன்மை செய்கின்றன. ‘அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான்’ என்று ஒரு பழமொழி உண்டு. ஐந்து என்பது கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தையும் குறிக்கும். இந்த உறுப்புகள் ஒடுங்கும் போது, மனம் மோட்சத்தைத் தேடி, ஞானத்தை தேடி புறப்படுகிறது. வறுமையால் உணவில்லை, சூழ்நிலை காரணமாக உணவில்லை என்ற நிலை வரும் போது கிடக்கும் பட்டினி விரதம் ஆகாது. நம் கண்முன் பாலும், பழமும், இனிப்பும், சித்ரான்னங்களும், பிற வகை உணவுகளும் குவிந்து கிடக்கும்போது, மனதை அடக்கி பசித்திருக்கிறோமோ, அது தான் உண்மையான விரதம். இன்றைய உலகில், உணவுக் கட்டுப்பாடு பற்றி டாக்டர்களே நமக்கு அறிவுறுத்துகிறார்கள். ‘டயட்டீசியன்’களுக்கு இப்போது நிறையவே வேலை. எந்த வகை உணவு உண்ணலாம், எது கூடாது என்று இருதயவியல் நிபுணர்கள் நமக்கு ஆலோசனை வழங்குகிறார்கள்.
இதைத் தான், நமது முன்னோர் விரதம் என்றார்கள். ஆயுர்வேதம் என்பது அதர்வண வேதத்தின் உபவேதமாகும். இதில் ‘லங்ஙனம் பரம ஔஷதம்’ என்று சொல்லப்பட்டுள்ளது. ‘லங்ஙனம்’ என்றால் ‘பட்டினியாய் இருத்தல்’. ‘ஔஷதம்’ என்றால் ‘மருந்து’. உணவைக் கட்டுப்படுத்துவது சிறந்த மருந்து என்பது வேதவாக்காகும். நமது வயிறு 15 நாட்களுக்கு ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும். அதனால் தான் அமாவாசை, பவுர்ணமி, வெள்ளி, சஷ்டி என்றெல்லாம் விரதங்களை வகுத்தார்கள். விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகிறது. சுருங்கி விரியும் தன்மை சீராகிறது. மலஜலம் சரியாக வெளியேறுகிறது. ஆரோக்கியமாக வாழவே விரதங்களை நம் முன்னோர் வகுத்தனர்.