பதிவு செய்த நாள்
06
அக்
2019
03:10
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் நவராத்திரி விழாவை, பொதுமக்கள் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.பொள்ளாச்சி நகரில், விழாவையொட்டி வீடுகளில் கொலு வைத்து பொதுமக்கள் தினமும் வழிபாடு நடத்தி வருகின்றனர். கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவதுடன், அம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில், மஞ்சள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. நேற்று முன்தினம் நடந்த விழாவில் தனலட்சுமி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையில், பண மாலையால் அலங்கரிக்கப்பட்டு, தாமரையில், மகாலட்சுமி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பஜனை பாடல்களை பாடி பக்தர்கள் வழிபட்டனர்.பொள்ளாச்சி சிவராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில், நவராத்திரி கொலு அமைத்து சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.சூலக்கல் மாரியம்மன் கோவிலில் நேற்று, இளஞ்சிவப்பு நிற பட்டு உடுத்தி, ராஜேஸ்வரி அம்மனாக அருள்பாலித்தார். நவராத்திரியை முன்னிட்டு கோவிலின் முன்பகுதியில் கொலு வைக்கப்பட்டுள்ளது.நெகமம் ராமலிங்கசவுடாம்பிகை அம்மன் கோவிலில், பெண்கள் திருவிளக்கு வழிபாடு மற்றும் பூஜை நடத்தினர்.நெகமம் காமாட்சி அம்மன் கோவிலில், பொங்கலிட்டு, மாவிளக்கு பூஜை நடந்தது. நவராத்திரி விழாவில் இன்று, பகல், 12:30 மணிக்கு, வடை, பாயசத்துடன், சரஸ்வதி மற்றும் ஆயுதபூஜை விழா நடக்கிறது. நாளை இரவு, 9:00 மணிக்கு விஜயதசமி அம்பு சேர்வை மற்றும் சுவாமி ஊர்வலம் நடக்கிறது.கிணத்துக்கடவு, தேவராடிபாளையம் மகாலட்சுமி கோவிலில் நவராத்திரி விழாவை ஒட்டி, தினமும் இரவு, 8:30 மணிக்கு மகாலட்சுமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.இதில், தேவராடிபாளையம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள், கோவிலுக்கு வந்து மகாலட்சுமியை வழிபடுகின்றனர். கோவிலில், நவராத்திரி கொலு அமைக்கப்பட்டு, தினமும் சிறப்பு வழிபாடு நடத்தி, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.