சிவபெருமானை மனமுருகினால் வேண்டினால், திருவடி அடையலாம்
பதிவு செய்த நாள்
11
பிப் 2026 10:02
திருப்பூர்: ‘சிவபெருமானை மனமுருகி வேண்டினால், அவன் திருவடியை அடையலாம்என, மாணிக்கவாசகர் பாடுவதாக,’ திருவாசக பயிற்சியில் விளக்கப்பட்டது. திருப்பூர், யூனிவர்சல் ரோடு, ஹார்வே குமாரசாமி திருமண மண்டப, திருவருள் அரங்கில், கொங்கு மண்டல ஆடல் வல்லான் அறக்கட்டளை மற்றும் சபரி டைமண்ட்ஸ் ஆகியன சார்பில் திருவாசகப் பயிற்சி வகுப்பு, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்று வருகிறது. இதில், கோவை சித்தாந்த பேராசிரியர் சிவசண்முகம் பேசியதாவது: திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர், சிவனி டம் வேண்டும் போது, உன் திருவடியை அடைவது தான் பிறவிப் பயன். பிறவியில்லாப் பெரும் பேறு அடைய வேண்டும் என்று பாடுகிறார். கல்லாய், மனிதனாய், பேயாய், கணங்களாய், அசுரராய், முனிவராய், தேவராய், செல்லாய் நின்ற தாவர சங்கமம் என்று சொல்லி, அசையும் பொருளும் அசையா பொருளும் உள்ள இந்த உலகில், எல்லா பிறப்புகளும் நான் அடைந்து வந்தேன். இப்போது உன் திருவடியை திருப்பெருந்துறையில் கண்டதினால் அந்த துன்பங்களிலிருந்து விடுபடுகிறேன் என்று உருகுகிறார். பெருமானின் திருவடிகளை கண்டதால், ஏற்பட்ட பயன் என்னவென்றால், இப்பிறவியிலிருந்து நீக்கம், துன்பம் தரும் பிறவியிலிருந்து நீங்க வேண்டும் என்றால், பெருமானை மனமுருக வழிபட வேண்டும். அவனே குருவாய் வந்து காட்சி கொடுத்து தன் திருவடியைக் காட்டி மகிழ்விப்பான். மீண்டும் இப்பிறவிக்கு வராமல் நம்மை அழைத்துச் செல்வான் என்பதை மாணிக்கவாசகர் உறுதிப்படச் சொல்கிறார். இதனை வலியுறுத்தும் போது, எம்பெருமானை மனம் உருகி வழிபாடு செய்தால், அவனுடைய திருவடி காட்சி நமக்கு கிடைத்து, சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வான். அனைத்து விதமான பிறப்புகள் நாம் இந்த பூமியில் பிறந்தாலும் கூட பிறவி என்ற நோயிலிருந்து விடுபட வேண்டும். அவர் தந்த சிவபுராணத்தை, அனுதினமும் துதித்து, எம்பெருமானை மனம் உருகியும் வழிபாடு செய்தால், அவனருள் கிடைக்கும். இன்று உலகில் எவ்வளவோ பிரச்னை, கவலை மக்களுக்கு உள்ளது. மக்கள் சிவபுராணத்தை முறையாக பாடி வழிபட்டால், உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும். அனைவரும் திருவாசகம் படிப்போம்; மகிழ்வாக இருப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
|