பதிவு செய்த நாள்
06
அக்
2019
03:10
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, பக்தர்களுக்கு நுனிவாழை இலையில் நேற்று அன்னதானம் வழங்கப்பட்டது.புதுச்சேரி அடுத்த பஞ்சவடீயில், 36 அடி உயர, ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இங்கு, ஸ்ரீவாரி வேங்கடாசலபதி சுவாமி, தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். கோவிலில் மாதந்தோறும் மூல நட்சத்திரம் மற்றும் ஆங்கில மாதம் முதல் ஞாயிற்று கிழமைகளில் பால் அபிஷேக திருமஞ்சனம் நடக்கும். நேற்று, ஆஞ்ஜநேயர் சுவாமியின் ஜென்ம நட்சத்திரமான மூல நட்சத்திரமும், புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையும் சேர்ந்து வந்தது. இந்த மூல நட்சத்திரம், 30 ஆண்டுகளுக்கு பிறகு சேர்ந்து வந்துள்ளது.அதையொட்டி, சுவாமிக்கு மூல நட்சத்திர பால் அபிஷேக திருமஞ்சனம், ஆங்கில மாத முதல் ஞாயிற்று கிழமை திருமஞ்சனம் சேர்த்து, நேற்று காலை 7:30 மணிக்கு 1,500 லிட்டர் பால் மற்றும் மங்கள திரவியங்களால் விசஷே திருமஞ்சனம் நடந்தது.அதைத்தொடர்ந்து, ஆஞ்ஜநேயர் மற்றும் ஸ்ரீவாரி வேங்கடாசலபதிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு அன்னதானம் வழங்குவதற்கு சேவா மற்றும் சாரிட்டபிள் டிரஸ்ட் ஏற்பாடு செய்திருந்தது. காலை 11:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, நுனி வாழை இலையில் வடை, பாயாசத்துடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன், அறங்காவலர்கள் மற்றும் நிர்வாக அதிகாரி செய்திருந்தனர்.