பதிவு செய்த நாள்
28
அக்
2019
02:10
புதுச்சேரி: புதுச்சேரி கோவில்களில், தீபாவளி நோன்பு வழிபாட்டையொட்டி பெண்கள் கூட்டம் அலைமோதியது. புதுச்சேரியில் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தீபாவளி தினமான நேற்றே அமாவாசையும் வந்ததால், புதுச்சேரியில் முக்கிய கோவில்களில் நோன்பு வழிபாடு நடந்தது. இதனால் கோவில்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.
பெண்கள், பலகாரங்கள், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பூ, பழங்கள், வில்வ இலை, நோன்பு கயிறு ஆகியவற்றை மண் சட்டியில் வைத்து, கோவிலுக்கு எடுத்துச் சென்று, அங்கு பிரதிஷ்டை செய்திருந்த கலசத்தை பூஜை செய்து வழிபட்டனர். நோன்பு படைத்த கயிற்றை குடும்ப உறுப்பினர்களுக்கு கட்டினர். அந்த வகையில், அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவில், முத்துமாரியம்மன் கோவில், புதுச்சேரி சின்ன சுப்பராய பிள்ளை வீதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பாரதி வீதி காமாட்சியம்மன் கோவில், புஸ்சி வீதியில் உள்ள எல்லையம்மன் கோவில், திலாசுப்பேட்டை, லாஸ்பேட்டை மாரியம்மன் கோவில்களில், நோன்பு வழிபாட்டுக்கு ஏராளமான பெண்கள் நோன்பு எடுத்து சென்றனர்.