பதிவு செய்த நாள்
07
நவ
2019
03:11
ஆத்தூர்: மலைக்கிராமத்தில், 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த, சோழர் கால தமிழ் எழுத்து, செக்கு கல்வெட்டை, குன்னூர் அரசு உறைவிட பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கல்வராயன்மலை, குன்னூர் அரசு பழங்குடியினர் உறைவிட நடுநிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு மாணவர்கள், விஜி, சந்தியா, இளையராஜா, விஜய், ரேவந்த், சிவராஜ் ஆகியோர், கடந்த, 4ல், கல்லூர் மலைக்கிராமத்தில் களப்பயணம் மேற்கொண்டனர். அப்பகுதியில், செக்கு கல்வெட்டை கண்டறிந்து, தமிழ் ஆசிரியர் பெருமாளிடம் தெரிவித்தனர். அவர், மாணவர்கள், கல்வெட்டிலிருந்த மூன்று வரி தமிழ் எழுத்துகளை, படி எடுத்தபோது, 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த, சோழர் கால செக்கு கல்வெட்டு என தெரியவந்தது.
இதுகுறித்து, ஆய்வு செய்த, சென்னையைச் சேர்ந்த, மூத்த தொல்லியல் ஆய்வாளர் ராஜகோபால் கூறியதாவது: எண்ணெய் ஆட்ட, கல்லால் வடிவமைத்த செக்குகள், கோவிலுக்கு, கொடையாக வழங்கப்பட்டன. எண்ணெய் பிழிந்தெடுக்கும் தொழில், அரசுக்கு, முக்கிய வருவாயாக இருந்தது. இதனால், உடன் பிறந்தவர், உறவினர்கள் நலம் பெற வேண்டி, கோவிலுக்கு செக்கு செய்து கொடுப்பர். அதில், தானமாக வழங்கும் நபர் விபரம், கல்வெட்டாக வைக்கப்படும். அதன்படி, 10ம் நூற்றாண்டில், சோழர் காலத்துடைய இந்த கல்வெட்டில், பவித்ர மாணிக்கம் எனும் பெண், தலசோமர் கட்டிய கோவிலுக்கு கொடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில், கல் செக்குகள், எட்டாம் நூற்றாண்டு முதல், கல்வெட்டுகளுடன் கிடைக்கின்றன. கல்வராயன்மலையில், சின்னமாங்கோட்டில், 11ம் நூற்றாண்டு, ராஜேந்திர சோழன் கால கல்வெட்டு; வாழப்பாடி, புழுதிக்குட்டையில், செக்கு கல்வெட்டு முன் கண்டறியப்பட்டுள்ளது. இதில், விளக்கமாறன் என்பவரது மகன், நலம் பெற வேண்டி, கோவிலுக்கு செக்கு கொடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.