பதிவு செய்த நாள்
11
நவ
2019
01:11
பெரம்பலுார், அரியலுார் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், 4,500 கிலோ அரிசியில் தயாரிக்கப்பட்ட சாதத்தில், அன்னாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த, கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தில், ஆயிரம் ஆண்டு பழைமையான ராஜேந்திரசோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கம், 60 அடி சுற்றளவும், பதிமூன்றரை அடி உயரமும் கொண்டது. இங்கு, ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமி நாளில், அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான அன்னாபிஷேம், நடந்தது.
இதனை முன்னிட்டு கடந்த 9ம் தேதி காலை 9 மணிக்கு கணக்கவிநாயகருக்கு மகாபிஷேகமும், 10ம் தேதி காலை 9 மணிக்கு பிரகதீஸ்வரர், அம்பாள், மகிஷாசுரமர்த்தினி, சுப்ரமணியர் மற்றும் நவகிரகங்கள் ஆகியவற்றுக்கு மகாபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. முக்கிய நிகழ்வாக , 75 கிலோ அளவுள்ள 60 மூட்டை என 4,500 கிலோ பச்சரிசியால் சாதம் சமைத்து, காலை, 9 மணி முதல், மாலை, 4.15 மணி வரை, பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகமும், 7:00 மணியளவில் தீபாராதனையும் நடந்தது.
இதில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அன்னாபிரசாதத்துக்கு தயாரிக்கப்பட்டு லிங்கத்தின் மேல் சாத்தப்பட்ட சாதம், தீபாராதனைக்கு பின், 70 சதவீதம் சாதம் பொதுமக்களுக்கும், 20 சதவீதம் சாதம் கால்நடைகளுக்கும், 10 சதவீதம் சாதம் மீன்களுக்கும் வழங்கப்பட்டது. விழாவில், அரியலுார் கலெக்டர் ரத்னா, எஸ்.பி., ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்படுகளை காஞ்சி காமகோடி சங்கரமட அன்னாபிஷேக கமிட்டி மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.
இது குறித்து, அன்னாபிஷேக கமிட்டி உள்ளூர் ஒருங்கிணைப்பாளர் கோமகன் கூறியதாவது: ஆகமவிதிப்படி, அஸ்வினி நட்சத்திரத்தில் ஐப்பசி பவுர்ணமி அன்றே அன்னாபிசேகம் செய்ய வேண்டும். பவுர்ணமி இன்று மாலை 6:50 மணிக்கு துவங்குகிறது. இரவு தங்கும் பவுர்ணமி அன்றே அன்னாபிசேகம் செய்ய வேண்டும். நாளை பகலிலேயே பவுர்ணமி நிறைவு பெறுகிறது. நாளை அன்னாபிசேகம் செய்வது தவறு. இன்று நடந்த அன்னாபிஷேகத்துக்காக, 4,500 கிலோ பச்சரிசியால் சாதம் தயார் செய்யப்பட்டு லிங்கத்துக்கு சாத்தப்பட்டது.
லிங்கத்தின்மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது. இதனால், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதில், சிவாச்சாரியார்கள் தியாகராஜன், பாலாமணி, கணேசன் உட்பட 38 சிவாச்சாரியர்கள் மற்றும் காஞ்சி காமகோடி சங்கரமடத்தினர் 90 பேர் என 128 பேர் ஆகியோரை கொண்ட குழுவினர் சாதம் சமைத்து அன்னாபிஷேகம் செய்தனர். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.