மதுரையில் தானே மீனாட்சி அரசாட்சி செய்கிறாள் தஞ்சையிலுமா அவளாட்சி நடக்கிறது என்பவர்கள், இந்தச் செய்தியைத் தெரிந்து கொள்ளுங்கள். மதுரையில், மாணிக்கவாசகருக்காக சொக்கநாதர் நரியைப் பரியாக்கி திருவிளையாடல் புரிந்தார். இதே வரலாறை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட தலம் தஞ்சை மாவட்டம் செந்தலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில். அசுவசேனன் என்ற பாண்டிய மன்னனுக்குப் பிரம்மராயன் என்ற மந்திரி இருந்தார். சிவபக்தரான இவர் குதிரை வாங்கக் கொடுத்த பணத்தில் சிவாலயம் கட்டினார். இறைவனும் நரிகளைப் பரிகளாக்கி பிரம்மராயரைக் காத்தருளினார். வைகை நதி பெருக்கெடுத்தது போல, இங்கிருந்த நதியும் கரைபுரண்டோடியது. இறைவன் பிட்டுக்கு மண்சுமந்த திருவிளையாடலையும் செய்தருளினார். அமைச்சரின் பெயரான பிரம்மராயன், மாணிக்கவாசகரின் பட்டப்பெயரான ‘தென்னவன் பிரம்மராயன்’ என்பதை நினைவூட்டுகிறது.