ஐப்பசி பவுர்ணமி; சிவனுக்கு அன்னாபிஷேகம்.. தரிசித்தால் ஆனந்த வாழ்வுதான்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2023 10:10
சிவாலயங்களில் சிவனுக்கு இன்று அன்னாபிஷேகம் நடைபெறும். அன்னம் வேறு, ஆண்டவன் வேறு அல்ல. அன்னம் தெய்வசொரூபம் என்பதை உணர்த்தவே அன்னாபிஷேகம் நடக்கிறது. அன்னத்தால் ஈஸ்வரனை வழிபடுவது சிறப்பு. இன்று முடிந்த வரை அன்னதானம் செய்வோம்.. தெய்வீக அருளைப் பெறுவோம்.
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என சொன்னவர் வள்ளலார். அவரது வழிபாட்டில் முக்கியமானது அன்னதானம். கடலுார் மாவட்டம் வடலுாரில் சத்திய தருமசாலையில் அன்று தொடங்கிய அன்னதானம் இன்று வரை தடை படாமல் நடைபெற்று வருகிறது. துாய மனதோடு அன்னதானம் செய்பவரை இயற்கை வழிநடத்தும். இவ்வுலகில் அவரை வாழ்வாங்கு வாழ வைக்கும். வெயிலும் மழையும் அவரை ஒன்றும் செய்யாது. நோய்கள் அணுகாது. வறுமை தீண்டாது. எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார். அவர் நினைத்தால் மட்டுமே அவரது உயிரானது பிரியும். விருந்துக்குப் போன இடத்தில் கூடுதலாக ஒரு நாள் தங்கினால், சோறு கண்ட இடம் சொர்க்கமா என கேட்பார்கள். இதன் உண்மை அர்த்தம் என்னது தெரியுமா? சிவன் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியன்று சுத்தன்னத்தால் அபிஷேகம் நடக்கும். அதை தரிசனம் செய்பவர்களுக்கு சொர்க்கம் செல்லும் புண்ணியம் கிடைக்கும். இதனால் தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என சொன்னர்கள். இதுவே காலப்போக்கில் கேலி செய்யும் விதமாக மாறி விட்டது.
சோத்துக்குள்ள இருக்கும் சொக்கநாதர்; அரியலுார் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடக்கும். திருச்சியிலிருந்து 110 கி.மீ., துாரத்தில் உள்ள இங்கு மூலவர் லிங்கம் பதிமூன்றரை அடி உயரம் கொண்டவர். இதற்கு அபிஷேகம் செய்ய நுாறு மூடை அரிசியை சமைப்பர். சோழர் காலத்தில் நடந்த இந்த அன்னாபிஷேகம், காலப்போக்கில் மறைந்தது. ஆனால் காஞ்சி மஹாபெரியவரின் வழிகாட்டுதலால் மீண்டும் தொடங்கப்பட்டது. காலையில் தொடங்கும் அபிஷேகம் மாலை வரை நடக்கும். மூலவரை முழுமையாக அன்னத்தால் அலங்கரிப்பர். அப்போது, சுவாமியின் மீது இருக்கும் ஒவ்வொரு சோற்றிலும் சிவலிங்கம் இருப்பதாக பாவித்து வழிபடுவர். எறும்பு, கால்நடை, பறவை உள்ளிட்ட எல்லா உயிர்களுக்கும் இந்த உணவை வழங்குவர். புளி ரசம் சேர்த்து பக்தர்களுக்கும் பிரசாதமாக கொடுப்பர். சிவன் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமி அன்று நடத்தப்படும் அன்னாபிஷேகத்தை தரிசிப்பவருக்கு வாழ்வில் உணவு பற்றாக்குறை ஏற்படாது.