கும்பகோணம்: இன்று (பிப்.14ல்) ரத சப்தமியை முன்னிட்டு பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர். ரதசப்தமி - சப்தமி என்றால் ஏழு. ரதம் என்றால் தேர். சூரியனது திதி சப்தமி. சூரியன் ஏழு குதிரைகள் பூட்டியதேரில் தை 1ம்தேதி வட திசை நோக்கி பயணப்படுவார். அந்த சூரியன் மாசி 1ம் தேதி வடதிசை நோக்கி செல்லும் தனது தேரை நிலைப்படுத்துவார். இதுவே ரத சப்தமி எனப்படும். இந்தநாளில், சூரிய உதயத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராட செல்வது சிறப்பு. அவ்வகையில், இன்று மகாமக குளத்தில் அதிகாலை முதலே ஏழு எருக்கம் இலைகள், மஞ்சள் பொடி கலந்த அட்சதையுடன் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் தலைக்கு மேலே வைத்துக் கொண்டு நீராடி சென்றார்கள். அவ்வாறு நீராடினால், ஆயுளும், குறையாத ஆரோக்யமும் அளிக்கும், சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும் என்பதால், பல ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மகாமககுளத்தில் நீராடினர்.