பதிவு செய்த நாள்
29
பிப்
2016
12:02
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகத் திருவிழாவின் முக்கிய நாட்கள் முடிந்துள்ளன. கும்பகோணம், தமிழகத்தின் ஆன்மிக நகரங்களில் ஒன்று. இங்குள்ள மகாமக குளத்தில் நடந்த தீர்த்தவாரி விழா நேரத்தில், மக்கள் லட்சக்கணக்கில் நீராடி, இறைவனை வழிபட்டிருக்கின்றனர். மகாமக நாள், அதற்கு முன் ஒரு வாரம், இனி அடுத்த சில நாட்கள் என்று இங்கு வந்து சென்ற பக்தர்கள் எண்ணிக்கை, 40 லட்சத்தையும் தாண்டியிருக்கிறது. இத்தடவை மகாமக விழாவில், பக்தர்கள் நீராடிய புனித குளத்தில் அதிக அளவு குப்பைகள் சேராமல் இருந்திருக்கிறது. அதிக குளோரின் கலப்புள்ள சுத்தநீரும், முறையாக குளத்தில் விடப்பட்டிருக்கிறது. நாகா சாதுக்கள் உட்பட நம்மூரைச் சேர்ந்த துறவியர் பலரும் புனித நீராடிச் சென்றிருக்கின்றனர். தேர்தல் நேரம் என்பதால், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், இந்த புனித நீராடலில் பங்கேற்றிருக்கின்றனர். தமிழகத்தின் முதல்வர் சார்பில் பலர் நீராடினர் என்றால், தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும் இதில் சளைக்கவில்லை.
பஸ் வசதி உட்பட அனைத்து வசதிகளையும் அரசு செய்தது என்று பட்டியலிட்டாலும், எப்படி லட்சக்கணக்கான மக்கள் எவ்வித சர்ச்சையும் எழுப்பாமல் பங்கேற்றனர் என்பதே ஆய்வுக்கு உரியது. மகாமகக் குளத்தில் குளித்ததும், வெளியேற போலீசார் கண்காணிப்பும், சில நடைமுறைகளும் இருந்த போதும், ஜாதி மற்றும் பணக்கார ஏழை பாகுபாடின்றி, வேறு பேதங்கள் இன்றி, மக்கள் இதில் பங்கேற்றது காலம் காலமாக பின்பற்றும் பக்தியின் அடையாளம். தமிழ் அற இலக்கியங்களில் நீர் நிலைகளில் குளிப்பதில் ஆண், பெண் இருபாலருக்கும் காலம் காலமாக உள்ள வரன்முறைகள் ஏராளம். அது இன்றைய சுற்றுச் சூழல் பாதுகாப்பு கருத்துக்களுக்கு முன்னோட்டமாக அமைந்திருக்கிறது. இந்த நாட்டைச் சேர்ந்த திருவிழா அல்லது முக்கிய நாட்களில் இம்மாதிரி மக்கள் கூடும் போது, சட்டம் – ஒழுங்கு இயல்பாக இருப்பது பெரிய விழாக்களின் அடிப்படை சிறப்பாகும்.
கும்பகோணம் மட்டும் இன்றி, திருச்செந்தூரில் மாசி மகத் தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு, மாமல்லபுரம் கடற்கரையில் நடந்த இருளர் பாரம்பரிய திருவிழா, ராமேஸ்வரத்தில் மாசிமக விழா என்று பல இடங்களில் மக்கள் கூடி தங்கள் மரபு வழிபாட்டை நிரூபித்திருக்கின்றனர். மொபைல் வசதி, போக்குவரத்து வசதி, மற்ற வசதிகள் அதிகரித்த போதும், இந்த விழாவையும் தங்களது வழக்கப்படி அதிக எண்ணிக்கையில் பங்கேற்று கொண்டாடி இருக்கின்றனர். பிளாஸ்டிக் மற்றும் குப்பையை அகற்ற துப்புரவு தொழிலாளர் ஆயிரக்கணக்கில் பங்கேற்று, தூய்மை காத்தது வரவேற்கத்தக்கது. கும்பகோணம் ஆன்மிக சுற்றுலா நகரமாக இருப்பதால், இதே மாதிரி தூய்மை, போக்குவரத்து வசதி உடன் மற்ற வசதிகளை அந்த நகராட்சி நிரந்தரமாக ஏற்படுத்த வேண்டும். அது மட்டுமின்றி, அறநிலையத்துறை தன் கட்டுப்பாட்டில் உள்ள பழமைமிக்க கோவில்களை தூய்மையாக வைத்திருப்பதுடன், அதன் பெருமைகளை தொடர்ந்து வெளிப்படுத்த கும்பகோண முயற்சிகளைப் போல புதிய கோணத்தில் மேற்கொள்ள வேண்டும்.
தகவல் பரிமாற்ற நடைமுறைகள் அதிகரித்த காலம் என்பதாலும், ஆன்மிக கருத்துக்களில் ஆர்வம் ஒருபக்கம் அதிகரிப்பதும், இந்த வகை சுற்றுலா அதிகரிக்கும். ஆகவே, போக்குவரத்து குளறுபடி, அடிப்படை வசதிகள் அதிகரிப்பு, புதிதாக வருபவர்களிடம் பணம் பறிக்கும் கூட்டத்தை தடுக்க வழிகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவது அரசு நிர்வாகத்தில் அடங்கும். சட்டசபைக் கூட்டத்தின் கடைசி தொடரில், கோவில் நிலங்களில் வீட்டுமனைகள் வைத்திருப்போருக்கு, அவர்கள் பெயரில் பட்டா தர முடியாது என்பதை அரசு தெரிவித்தது போல, இம்மாதிரி மக்கள் விரும்பி வரும் நகரங்களில், நமது கலாசாரத்திற்கு எதிரான முரண்பாடுகள் அதிகம் தலைதூக்காது, வளர்ச்சி அமைவதற்கு நெடுநோக்கு அணுகுமுறை தேவையாகிறது.