பதிவு செய்த நாள்
22
பிப்
2016
03:02
கும்பகோணம்: கும்பகோணம் மகாமத்தையொட்டி, காவிரிபடித்துறையில், பெருமாள் உற்சவர்களில் இறங்கிய மகாமகம் தீர்த்தவாரி கோவிந்தா கோவிந்தா என முழக்கத்துடன் வெகு சிறப்பாக நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமக பெருவிழா கடந்த 13ம் தேதி 12 சைவ கோயில்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைபோல, கடந்த 14ம் வைணவ கோயில்களான சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசாமி, ராஜகோபாலசாமி, ஆதிவராகப்பெருமாள் ஆகிய கோயில்களில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து இருவேளையில்களில் பல்வேறு வாகனங்களில் பெருமாள்களின் வீதிஉலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி இன்று மதியம் மகாமக குளத்தில் உற்சவர்கள் வீதி உலாவுடன், 12.00 மணிக்கு மகாமகத் தீர்த்தவாரி தொடங்கியது. தொடர்ந்து ஒருமணி நேரம் நடந்தது. அதை சமயம் காவிரி சக்கரப்படித்துறையில், ஐந்து பெருமாள்களும் எழுந்தருள அவர்களின் பிரதிநிதிகளான தீர்த்தபேரர்கள் என்கிற செல்வர்கள் சக்கரப் படித்துரையில் எழுந்தருள செய்து சிறப்பு திருமஞ்சணம், தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, காவிரிநதிகரையில், செல்வர்கள் ஒரே நேரத்தில் புனித நீராடினார்கள். அப்போது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் அனைவரும் ஒரே குரலில், கோவிந்தா. கோவிந்தா.. என கோஷமிட்டவாறு காவிரியில் புனித நீராடி பெருமாள்களை வழிப்பட்டனர். இவ்விழாவிற்காக, சக்கரப்படித்துரை மண்டபம் சுமார் 3.5 லட்சத்திலும், பொதுபணித்துறையினர் சார்பில் சுமார் 7.5 லட்சம் மதிப்பில் படித்துறையும் புதுப்பிக்கப்பட்டு இருந்தது. மண்டபத்தை அலங்கரிக்க பெங்களூரில் இருந்து மலர்களும், பூஜைகளுக்காக திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்தும் மலர்கள் கொண்டு வரப்பட்டன. இதில், காஞ்சி விஜயேந்திரர், பா.ஜ.க., தேசிய செயலாளர் இல.கணேசன் போன்றவர்கள் கலந்துக்கொண்டனர்.