சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 34 · 52 / 159
கும்பாபிஷேக தத்துவம்
- உலகில் வாழும் உயிர்கள் உய்யும் வண்ணம் பெருங்கருணை கொண்ட கடவுள் எளிதில் அருளும் வண்ணம் ஆங்காங்கே கோயில் கொண்டு திருவுருவம் காட்டி அருளுகின்றான். எங்கும் நிறைந்த பரம்பொருளை கோயிலுள்ளே எழுந்தருளச் செய்து வழிபடுதலே கும்பாபிஷேகம் ஆகும்.
- கடவுள் எண்குணத்தான். அவன் எட்டு நிலைகளில் இருந்து அருள் வழங்குகின்றான். மண், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா என இந்த எட்டு நிலைகளில் இருந்து திருவருள் புரிகின்றான். இந்நிலைப்பாட்டிலே செய்யப் பெறுதலே மகா கும்பாபிஷேகம் எனப்படும்.
- மண் வடிவாகக் குடத்திலும்,
- நீர் வடிவாகத் தீர்த்தத்திலும்,
- நெருப்பு ஹோமத்திலும்,
- காற்று வடிவாக மந்திர உச்சரிப்பிலும்,
- ஆகாய வடிவாக ஒலியின் விரிவிலும்,
- சூரிய வடிவாக ஒளியிலும்,
- இந்து (சந்திர) வடிவாக மனத்தின் குழைவாலும்,
- ஆன்ம வடிவாக உயிர்களின் ஏகோபித்த கூட்டு வழிபாட்டாலும் கடவுளை ஓரிடத்தில் நிலை நிறுத்தலே கும்பாபிஷேகம் ஆகும்.