திருவனந்தபுரம்: சபரிமலைக்கு செல்லும் பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டு வரும் வேளையில், தமிழகத்தை சேர்ந்த 139 பெண்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதி தொடர்பான வழக்கு சில தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை தடையில்லை என உத்தரவிட்டது. இதன் மூலம் இப்போதும் இளம்பெண்கள் கோவிலுக்கு செல்லலாம் என்ற நிலையே நீடிக்கிறது.
நீதிமன்ற அனுமதி இல்லாமல் கோவிலுக்கு வரும் 10 முதல் 50 வயதுள்ள பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என கேரள அரசு அறிவித்தது. ஆனாலும், தரிசனம் செல்ல பல பெண்கள் விருப்பம் தெரிவித்து, அதற்காக ஆன்லைனில் முன்பதிவும் செய்துள்ளனர். கேரளா தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், தற்போது வரை 319 இளம்பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். ஆந்திராவை சேர்ந்த 160 பேரும், தமிழகத்தை சேர்ந்த 139 பேரும் பதிவு செய்துள்ளனர் எனவும், கேரளாவில் இருந்து ஒருவர் கூட பதிவு செய்யவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவர்களை தரிசனம் செய்யவிடாமல் கேரள அரசும், தேவஸ்தான போர்டும் அனுமதிக்காது என கூறப்படுகிறது.