பதிவு செய்த நாள்
29
நவ
2019
02:11
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கணபதி ஹோமத்துடன் பாலாலயத்திற்கான யாகசாலை பூஜை காலை துவங்கியது.
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில், கடந்த 1996ல் கடைசியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 23 ஆண்டுகளுக்கு பிறகு 2020 பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தொல்லியல்துறை, இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் பக்தர்களின் உதவியுடன் திருப்பணிகளை செய்தனர். அதன் தொடர்ச்சியாக பாலாலய வைபவங்களுக்காக கடந்த வாரம் பந்தகால் மூகூர்த்தம்,கோவில் வளாகத்தில் நடப்பட்டு, இன்று காலை 8.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம்,லெஷ்மி பூஜை முடிந்தவுடன் இடது புறத்தில் உள்ள இரண்டை விநாயகருக்கு கும்ப நீரை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் யாக குண்டத்தில் வாஸ்து சாந்தி,பிரவேச பலியுடன் முதல் நாள் நிகழ்ச்சி நிறைவுற்றது. இதில் பல்வேறு ஊரில் இருந்து சிவச்சாரியார்கள், ஓதுவார்கள் உள்ளிட்டோர்கள் கலந்துக்கொண்டனர்.
நாளை 30ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி ஸம்ஹிதா,மூலமந்திர ஹோமம், ருத்ராபிஷேகமும், மாலை 5 மணிக்கு மருத்சங்கரஹணம், அங்குரார்பணம், ரஷ்கபந்தன், கும்பாலங்காரம், கடம் புறப்பாடு, யாகசாலை பிரவேசம் போன்றவை நடைபெறுகிறது. தொடர்ந்து டிசம்பர் 1ம் தேதி காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாகசாலையும், மாலை 6 மணிக்கு மூன்றாம் காலை யாகசாலையும் நடைபெறும். டிசம்பர் 2ம் தேதி அதிகாலை 5 மணிக்கு மேல் காலை 7 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், 7 மணிக்கு யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடும், 9 மணிக்கு மேல் பாலஸ்தாபன மூர்த்திகளுக்கு புனித நீராட்டு வைபவம் நடைபெறுகிறது. அதன்பிறகு மூலவர் சன்னதி திரையிட்டு மறைக்கப்பட்டு, ஆவாஹனம் செய்யப்பட்ட படத்திற்கு பூஜைகள் நடைபெறும்.