விருதுநகர்: விநாயகன் வினை தீர்ப்பவன் என்பதை நாம் அறிவோம். விநாயகனுக்கு கணேசன் என்ற மறுபெயரும் உண்டு. எந்த கோயில் சென்றாலும் முழு முதற்கடவுளாய் நாம் வணங்குவது கணேசன் தான். விருதுநகரில் தேசிய நான்கு வழிச்சாலை ஓரம் வன்னியபெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில் சிவகணேசன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளது.
ராணி மங்கம்மாள் காலத்தில் சிவகணேசன் கோயில் கல் கட்டடமாக கட்டப்பட்டது. 19ம் நுாற்றாண்டில் மங்கம்மாள் சாலை தான் தற்போதைய தேசிய நான்கு வழிச்சாலை. நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிக்காக கோயில் அகற்றப்பட்டு நான்கு வழிச்சாலை ஓரம் தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டது. இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தியாவிலே சிவனும், கணேசனும் ஒரே கற்சிலையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த கோயிலில் தான். கோயில் இடமாற்றப்பட்ட பின் சிவனுக்கு உகந்த வில்வ மரம் சுயமாக வளர்ந்துள்ளது. வேப்பமரமும், அரசமரமும் இணைந்து சிவன், பார்வதி போன்று காட்சி தருகின்றனர். வேப்பமரத்தில் நல்ல பாம்பு படம் எடுப்பது போன்ற அம்சம் இருப்பது கூடுதல் சிறப்பு. இது தவிர கோயிலில் மணிகட்டுவது முக்கிய வேண்டுதலாகும். நான்குவழிச்சாலை வழியாக வரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் இக்கோயிலில் நேர்த்திக்கடன் வேண்டி அது நடந்த பின் மணி கட்டி செல்கின்றனர். இதனாலே தந்தையும், மகனும் இணைந்து வேண்டி வரும் பக்தர்களுக்கு நினைத்ததை நடத்தி காட்டுகின்றனர் என்கின்றனர் அப்பகுதி மக்கள். இங்கு பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தினமும் காலை 8:30க்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. குழந்தை பாக்கியம், மனநலம், மகிழ்ச்சி வேண்டி பலரும் சிவகணேசன் கோயிலை தேடிவருகின்றனர்.