பதிவு செய்த நாள்
27
டிச
2019
10:12
சபரிமலை: சபரிமலையில் நேற்று, தங்க அங்கி அணிவித்து, சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. மண்டல பூஜை இன்று(டிச.,27) நடக்க இருப்பதையொட்டி ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.
மண்டலபூஜைக்காக, 23-ம் தேதி, ஆரன்முளாவில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி, நேற்று மாலை, 6:00 மணிக்கு, சரங்குத்தி சென்றது. அங்கு, தேவசம்போர்டு சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. மாலை, 6:25 மணிக்கு, 18-ம் படி வழியாக வந்த அங்கியை, தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு, மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி ஆகியோர் பெற்றனர். நடை அடைத்து, மூலவருக்கு அங்கியை அணிவித்தனர். பின் நடை திறந்து, தீபாராதனை நடைபெற்றது. இதில் தேவசம்போர்டு தலைவர் வாசு உட்பட பலர் பங்கேற்றனர்.
இன்று மண்டல பூஜை: இன்று காலை, 10:00 மணி முதல், 11:40 மணிக்குள், மண்டல பூஜை நடைபெறுகிறது. மூலவருக்கு கலச அபிஷேகம் செய்த பின், தங்க அங்கி அணிவித்து, மண்டலபூஜை நடைபெறும். மதியம், 1:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 10:00 மணிக்கு அடைக்கப்படும். இரவு, 8:30 மணிக்கு மேல், பக்தர்கள், பம்பையில் இருந்து செல்ல அனுமதி கிடையாது. மகரவிளக்கு கால பூஜைக்காக, டிச., 30-ம் தேதி மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கும். அன்று வேறு பூஜைகள் கிடையாது. 31ம் தேதி- அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறந்து, நெய்யபிஷேகம் துவங்கும்.