பதிவு செய்த நாள்
15
ஜன
2020
01:01
பொங்கல் என்றாலே, மஞ்சள், இஞ்சிக் கொத்து கட்டிய பானையும், செங்கரும்பும், வாழையும் நினைவுக்கு வரும். காலங்கள் பல கடந்தாலும், மண்பானை பொங்கலுக்கு மவுசு அதிகம் தான்.காரணம், மண் மணம் கமழும் பொங்கல் கிடைப்பதோ, மண்பானையில் பொங்கும் போது தான். மண்பானை என்றாலே, பழமை தான் நினைவுக்கு வரும். நாம், நம் வரலாற்று சக்கரத்தை, பானை சக்கரத்துடன் சேர்த்தே சுழற்றலாம்.தற்போது, தொல்லியல் துறையின் அகழாய்வுகளில், நீக்கமற எங்கும் கிடைக்கும், பழங்கால எழுத்துக்கள், பானை ஓடுகளில் தான் கிடைக்கின்றன.
இவை, 2,000 ஆண்டுகளுக்கு முன், பானை செய்வோரும், பானையை பயன்படுத்திய சாமானியர்களும், எழுதத் தெரிந்தவர்கள் என்பதை, நமக்கு சொல்லாமல் சொல்கின்றன. அதுமட்டுமல்ல, ரோம், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும், நமக்கும் இருந்த தொடர்பை, அந்த நாட்டு பானை ஓடுகள், நம் நாட்டிலும், நம் நாட்டு பானை ஓடுகள், அந்நாடுகளிலும், கிடைப்பதிலும் இருந்தே அறிந்து கொள்ளலாம். செப்பேடுஅது சரி, பானைகள் செய்தோரைப் பற்றி, வரலாற்றில் என்ன பதிவிருக்கிறது என்று பார்த்தால், ஆச்சரியமே கிடைக்கிறது.
அதாவது, தற்போதுள்ளது போல அல்ல, அவர்களின் அப்போதைய நிலை. அவர்கள், உயர்ந்த நிலையில் இருந்திருக்கின்றனர். அவர்களின் அப்போதைய பெயர், வேட்கோவர்கள். நாகப்பட்டினத்தில், ஒரு புத்தகவிகாரம் கட்டுவதற்காக, ஆனைமங்கலம் என்ற ஊரை தானமளிக்கிறான், மாமன்னன் ராஜராஜன். அந்த தானத்திற்கு சாட்சியாக, வேட்கோவர்கள் கையெழுத்திட்டனர். இதை, ஆனைமங்கலம் செப்பேடு கூறுகிறது. ஏன் அவர்களுக்கு அந்த சிறப்பு என்று நோக்கினால், அப்போதைய கோவிலின் நைவேத்திய மண்பாண்டங்களையும், திருவிளக்குகளையும் அவர்களே செய்தனர்.
களிமண்ணை பிசைந்து, சக்கரத்தில் வைத்து மண்பாண்டம் செய்வர். செய்த மண்பாண்டத்தை கெட்டியாக்க, வட்ட சில்லை வைத்து, உள்பக்கத்தை தட்டுவர். இதே முறையைத் தான், முன்னோர்களும் பின்பற்றினர் என்பதற்கு சாட்சியாக, அகழாய்வில் கிடைக்கும் வட்ட சில்லுகளும், ஆந்திர மாநிலம், அனந்தபூரில் உள்ள சிற்பமும் உணர்த்துகின்றன. கோபம் வருகிறதுசட்டிச்சோறு, எச்சோறு, புள்ளிச்சோறு, தங்கட்சோறு, வரிச்சோறு, வெட்டிச்சோறு என்ற வார்த்தைகள் கல்வெட்டுகளில் வருகின்றன.
அரசனின் ஆணைக்கேற்ப, பொதுக் காரியத்தில், கட்டாயம் பங்கேற்போருக்கு வழங்கப்பட்ட உணவுக்கு, வெட்டிச் சோறு என்று பெயராம். அதாவது, சமூக சேவை செய்து, உண்ணும் உணவை தான் அப்படி சொல்லி உள்ளனர். இப்போது, அப்படி நம்மை யாராவது சொன்னால், மூக்கின் மேல் கோபம் வருகிறது. அர்த்தம், காலத்துக்கேற்ப மாறிவிட்டது.அதேபோல, கோவிலில் வேலை செய்வோருக்கு, கூலியுடன் சட்டிச்சோறு வழங்கப் பட்டது. அதற்கான சட்டிகள் தொடர்ந்து தயாரிக்கப்பட்டன. சோற்றில் இருக்க வேண்டிய பொருட்களின், அளவு குறித்தும் கல்வெட்டு கள் கூறுகின்றன.
இதன் வழியாக தெரிவிப்பது என்னவென்றால், நம் கோவில்களிலும், வழிபாடுகளிலும் பிரிக்கமுடியாமல் இருந்தவை, சட்டியும், பானைகளும் தான். அதனால், இந்த பொங்கல் பண்டிகைக்கு, மண்பானையில் பொங்கல் வைத்து, நம் பாரம்பரியத்தை தொடர்வோம்.- கி.ஸ்ரீதரன்,தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் துணை கண்காணிப்பாளர்.