திருமங்கலம் : திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்களின் குலதெய்வமான முனியாண்டி சுவாமி கோயில் திருவிழாவில் பிரசாதமாக பிரியாணி வழங்கப்பட்டது.
இங்கு ஆண்டுதோறும் தை வளர்பிறை வெள்ளியன்று இத்திருவிழா நடக்கும். இதற்காக பக்தர்கள் ஒருவாரம் காப்புகட்டி விரதமிருப்பர். அவர்கள் நேற்று காலை பால்குடம் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். மாலையில் தேங்காய், பழம், பூ தட்டுகளை ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர். பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகள் பலியிடப்பட்டு பிரியாணி தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.