பதிவு செய்த நாள்
31
ஜன
2020
10:01
தஞ்சாவூர் : தஞ்சை பெரியகோவிலில் நேற்று, பெருவுடையார் சன்னதியின், 216 அடி விமானத்தில், கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.தஞ்சாவூர் பெரியகோவில் கும்பாபிஷேகம், பிப்., 5ல் நடைபெற உள்ளது. பெருவுடையார் சன்னதி கருவறையில், 216 அடி உயரத்தில் உள்ள விமானத்தின் மீது இருந்த, 12 அடி உயர பிரம்மாண்டமான கலசம், புனரமைப்பு செய்வதற்காக, 5ம் தேதி இறக்கப்பட்டது.
இதே போல, பெரியநாயகி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், வாராஹி, சண்டீகேஸ்வரர் ஆகிய சன்னிதிகளின் கோபுர கலசங்களும் இறக்கப்பட்டன. மதுரையைச் சேர்ந்த, ஸ்பதி செல்வராஜ் தலைமையிலான, 25 பணியாளர்கள், புளி, சீயக்காய் உள்ளிட்ட பொருட்களால், கலசங்களை சுத்தம் செய்து, தங்க மூலாம் பூசினர். கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் கதிரியக்க பிரிவுத் தலைவர், விஞ்ஞானி வெங்கட்ராமன், சென்னை, ஐ.ஐ.டி., உலோகவியல் துறை பேராசிரியர் முருகையன் அமிர்தலிங்கம் ஆகியோர் தலைமையிலான குழு, கலசத்தின் நிலை குறித்து, தினமும் ஆய்வு செய்தது.இரண்டு வாரங்களாக, தங்க மூலாம் பூசப்பட்ட நிலையில், நேற்று காலை, 216 அடி உயர பெருவுடையார் சன்னிதி விமானத்தில், கலசம் ஏற்றுவதற்காக, சிவச்சாரியார்கள், ஓதுவார்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.காலை, 10:30 மணிக்கு, ஊழியர்கள் மூலமாக, 12 அடி உயரமுள்ள கலசத்தின் மகாபத்மா, ஆரடா, மகாகுடம், சிறிய ஆரடா, மலர், குமிழ் உட்பட, எட்டு பாகங்களும், கோபுரத்திற்கு ஏற்றபட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது.கலசத்தில், 225 கிலோ வரகு நிரப்பட்டது. கலசம் பிரதிஷ்டை செய்த பின், ஏழு சிவச்சாரியார்கள் பூஜைகள் நடத்தினர். கலசம் ஏற்றுவதை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மற்ற சன்னிதி கோபுரங்களில், இன்று, கலசங்கள் ஏற்றி, பிரதஷ்டை செய்யப்படுகிறது.பெருவுடையார் கலசத்திற்கு, 190 கிராம் தங்கம்; மற்ற ஆறு சன்னிதி கலசங்களுக்கு, 144 கிராம் தங்கம் என, 334 கிராம் தங்கம் பயன்படுத்தி, மூலாம் பூசப்பட்டது. செல்வராஜ்,ஸ்பதி.