பதிவு செய்த நாள்
06
பிப்
2020
11:02
ஈரோடு: மகாமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில், திரளான பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஈரோடு அருகே, சின்னசேமூர் மகா மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த, 28ல் மஞ்சள் காப்பு கட்டுதல், பூச்சாட்டுதல், கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கோவில் மூலவர் முன்பு நடப்பட்டுள்ள கம்பத்திற்கு, பெண்கள் தீர்த்த நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். நேற்று பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், அலகு ஊர்வலம் நடந்தது. இதில், வீடுகளில் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து வந்த பெண்கள், அம்மன் சன்னதியில் வைத்து படைத்து வழிபட்டனர். தொடர்ந்து அலகு ஊர்வலம் நடந்தது. கனிராவுத்தர் குளம் பகுதியில் இருந்து, வேல் அலகு, மயில் அலகு, வாள் அலகு, முதுகு அலகு, பறவைக்காவடி அலகு, தொட்டில் அலகு, குதிரை அலகு என, பல்வேறு வகையான அலகு குத்தியபடி நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், ஊர்வலமாக வந்தனர்; பலர் கிரேன் மூலம் உயரத்தில் தொங்கியபடி வந்தனர். தொட்டில் அலகு குத்தியபடி வந்த பக்தர்களிடம், பலர் தங்கள் குழந்தைகள், நோய், நொடி இல்லாமல், ஆரோக்கியமாக வாழ வேண்டும் என, வேண்டிக்கொண்டு, தொட்டிலில் போட்டு எடுத்துச் சென்றனர். வழிநெடுகிலும் நின்ற பொதுமக்கள், அலகு குத்தியபடி ஊர்வலமாக வந்த, பக்தர்களின் காலில் விழுந்து வணங்கி வழிபட்டனர். மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று காலை, 7:00 மணிக்கு கம்பம் எடுத்தல், 12:00 மணிக்கு உற்சவர் திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.