1974ல் நடந்த சம்பவம் இது. 35 வயது கொண்ட கண்மருத்துவர் ஒருவர் இருந்தார். காஞ்சி மகாசுவாமியின் பக்தரான அவர் வெளிநாட்டில் படித்தவர். மகாசுவாமிகளுக்குக் கண்புரை (வெள்ளெழுத்து) அறுவைச் சிகிச்சை செய்ய சுவாமிகளின் அன்பர்கள் இவரைத் தான் அணுகினர். சுவாமிகளின் பக்தர் என்பதால் அக்கறையுடன் அறுவைச் சிகிச்சை செய்வார் என எண்ணினர். மருத்துவரும் தமக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதினார்.
சிகிச்சை முடிந்ததும், சில நாட்கள் தலைக்குக் குளிக்காமல் இருக்கவும், சிகிச்சைக்குப் பின் கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்தும் சுவாமிகளுக்கு எடுத்துக் கூறினார். புன்னகைத்தபடி மருத்துவர் சொன்னதை எல்லாம் கேட்டார் சுவாமிகள். ஒரு சில நாட்கள் கழிந்ததும், அன்று நாளிதழைப் புரட்டிய மருத்துவர் திகைப்படைந்தார். காரணம் அன்று கிரகணம். கிரகணம் விட்டதும் தலைக்குக் குளிக்க வேண்டுமே! மகாசுவாமிகள் ஆசாரசீலர் ஆயிற்றே? தலைக்குக் குளிக்கக் கூடாது என வற்புறுத்தி சொன்னாலும் அவர் சொன்னதை அனுசரிப்பாரா? ஒருவேளை குளித்து பார்வை சரியாகவில்லை என்றால் சங்கடமாயிற்றே? பதட்டம் அடைந்த அந்த மருத்துவர் சென்னையில் இருந்து காரில் காஞ்சிபுரம் விரைந்தார். சுவாமிகளை சந்திக்க அனுமதி கேட்டார். பரபரப்புடன் நின்ற மருத்துவரைப் பார்த்த சுவாமிகள், ‘‘என்ன கிரகண புண்ணிய காலம் முடிந்ததும் தலைக்குக் குளித்திருப்பேனோ என் பயத்தில் ஓடி வந்தாயா? அப்படி செய்வேனா? ஒருவேளை குளித்து கண்கோளாறு சரியாகவில்லை என்றால் உன் தொழில் அல்லவா பாதிக்கப்படும்? நீ வளர்ந்து வரும் மருத்துவர் ஆயிற்றே? உன் மீது எனக்கு அக்கறை இல்லாவிட்டால் எப்படி? மந்திர ஸ்நானம் என்னும் முறை சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆபத்து காலத்தில் அதைப் பண்ணலாம் என்ற விதி இருக்கிறது. மந்திர ஸ்நானம் தான் நான் செய்தேன். கவலைப்படாதே! நிம்மதியாக உன் வேலையைப் பார்!’’ என்றார். மருத்துவரின் வழிகளில் கண்ணீர் வழிந்தது. தொழிலில் தான் நற்பெயர் எடுக்க சுவாமிகள் காட்டிய அக்கறை கண்டு மனம் நெகிழ்ந்தார். சுவாமிகளின் ஆசி பொய்க்கவில்லை. தொழிலில் பெரும் வளர்ச்சி பெற்றார். காஞ்சி மகாசுவாமிக்கே சிகிச்சை செய்தவர் என்ற புகழ் பரவியது. பிற்காலத்தில் சுவாமிகளின் ஆசியுடன் சென்னையில் மருத்துவமனை தொடங்கினார். பிறகு நாட்டின் பல இடங்களில் கிளைகள் தோன்றின. அந்த மருத்துவமனை தான் மகாசுவாமிகளின் குருவான ஆதிசங்கரரின் பெயர் கொண்ட ‘சங்கர நேத்ராலயா’. அந்த
மருத்துவர் தான் தற்போது 81வது பிறந்தநாள் காண்பவரும் பத்மஸ்ரீ பத்மவிபூஷண் பட்டம் பெற்றவருமான டாக்டர் பத்ரிநாத். திருப்பூர் கிருஷ்ணன்