பதிவு செய்த நாள்
29
பிப்
2020
11:02
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மாசி தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மாசி பெருவிழா, கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 23ம் தேதி மயானக்கொள்ளை உற்சவம், 26ம் தேதி தீமிதி விழா நடந்தது.
முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. அதனையொட்டி, காலையில் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்க கவசத்தில் சுவாமி அருள்பாலித்தார். மதியம் 1:30 மணிக்கு உற்சவர் அங்காளம்மன் தேரில் எழுந்தருளினார். 1:55 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து, இழுத்தனர். தேரோட்டத்தின்போது, பக்தர்கள் நேர்த்திக்கடனாக காய்கனிகள், தானியங்கள், நாணயங்கள், உணவுப் பொருட்களை தேர் முன் வாரி இறைத்தனர். விழாவில், கலெக்டர் அண்ணாதுரை, எஸ்.பி., ஜெயக்குமார், மஸ்தான் எம்.எல்.ஏ., உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர்கள் ராமு, ஜோதி, அறங்காவலர் குழுத் தலைவர் செல்வம் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். எஸ்.பி., தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை, காஞ்சி புரம், வேலுார், புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.